Friday, August 15, 2008

நிஜ சூப்பர் ஸ்டார்!!!

இந்த வார விகடன் ஒரு 'நிஜ' சூப்பர் ஸ்டார் பற்றியக் கட்டுரை வெளியுட்டள்ளது...
இதுவரை படிக்காதவர்கள், கண்டிப்பாகப் படிக்கவும்.

இளங்கோ போன்ற இந்த நிஜ சூப்பர் ஸ்டார்களால்தான் தமிழனின் வாழ்வு இன்னும் உயரப்போகிறது. இவரை போன்றோர்களால் தான் 2020 யில் இந்தியா வல்லரசாகும் கனவு, நிஜமாகப் போகிறது.

இவரைப் போன்றோரின் சாதனையை உலகுக்கு அறிவிக்கும் விகடனுக்கு நன்றிகள் பல...



அந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்...

-----------------------------
....குத்தம்பாக்கம் கிராமம்!

இன்று பாசமும் ஈரமுமாகப் பசுமை பேசும் அந்த மண்ணில், மற்றவர்கள் கால் வைக்கவே பயந்து நடுங்கிய காலம் ஒன்று உண்டு. பெயரிலேயே குற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்த கிராமத்துக்கு அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி ஸ்தலம். கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால், இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது!

எப்படி நடந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்..? கேள்விக்கு விடையாய், வெளிச்சமாய் வந்து என் கை குலுக்குகிறார் இளங்கோ. குத்தம்பாக்கம் பஞ்சாயத்து அகாடமி தலைவரான இளங்கோவை இன்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் 'வந்துட்டுப் போங்களேன் சார்' எனப் பேச அழைக்கின்றன.
------------


'குற்றங்களும் தவறுகளும் எங்கே சார் உருவாகுது... வேலையில்லாததும் வறுமையும்தானே முதல் காரணம். நோய் என்னன்னு தெரியாம, மருந்துக்கு அலைஞ்சா எப்படிச் சரியாகும்? அதைக் கண்டுபிடிச்சு சரி பண்ணினதுதான் மாற்றத்துக்கான முதல் விதை. குடிசைகள்தான் கூடாது. கிராமங்களுக்கு குடிசைத் தொழில்கள் அவசியம் வேணும். அதை உருவாக்கி இந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தந்தோம். எங்க ஊர்ல விளையுற நெல்லை அரைக்க, நாங்களே ரைஸ் மில் ஆரம்பிச்சோம். துவரம்பருப்பை பாலிஷ் போடும் தொழிற்சாலையிலிருந்து வீடு கட்டப் பயன்படுத்தும் கட்டடப் பொருட்கள் வரை அத்தனையையும் நாங்களே தயாரிக்கிறோம். ஊர்ல காய்க்கிற தேங்காய்களில் இருந்து மொத்தமா எண்ணெய் எடுக்கிறோம். எண்ணெயில் இருந்து சோப்பு தயாரிக்கிறோம். மண்ணெணெய் ஸ்டவ்விலிருந்து தெரு விளக்குகளைப் பொருத்தத் தேவையான அலுமினியக் கூடுகள் வரை செஞ்சு வெளியூர்களுக்கு சப்ளை பண்றோம்.
----------

இளங்கோ இன்ஜினீயரிங் முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். 'சார், இது என் சொந்த ஊர். என்னை வளர்த்த மண். கெமிக்கல் இன்ஜினீயரா நான் நல்லா இருக்கேன். ஆனா, என் ஊர் அப்படியே இருக்குதேன்னு வருத்தப்பட்ட நான், வேலையை வீசிட்டு ஊருக்கே வந்தேன். சாராயமும் சாதிச் சண்டையுமா கிடந்த கிராமத்தில் என்னால் முதலில் எதுவும் பண்ண முடியலை. அதிகாரம் கையில் இருந்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்னு தோணுச்சு. தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆனேன். ஆரம்பத்தில் என்னை எதிர்த்தவங்ககூட என் நல்ல நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஊர் நன்மைதான் முக்கியம்னு ஒவ்வொரு வங்கியா ஏறி இறங்கினேன். அரசாங்கத்தின் ஒவ்வொரு கதவையும் ஓயாமத் தட்டினேன். அரசிலும் வங்கிகளிலும் என்னவெல்லாம் திட்டங்கள் இருக்கோ, அத்தனையையும் குத்தம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தேன். நினைச்சது நான்... ஆனா, ஊரே ஒண்ணு கூடி நடத்திக்காட்டினாங்க. இன்னிக்கு, சுத்துவட்டாரமே மரியாதையா, முன்னோடியாப் பார்க்கிற அளவுக்கு குத்தம்பாக்கத்தைச் சுத்தம்பாக்கம் ஆக்கிட்டோம்!'' என்கிறார் இளங்கோ நெகிழ்ச்சியாக!
---------------

9 comments:

Natty said...

இந்த சூப்பர் ஸ்டாருக்கு என்னுடைய சார்பில் ஒரு வணக்கம்... இன்னும் நிறைய சூப்பர் ஸ்டார்கள் உருவாக வாழ்த்துக்கள்

Unknown said...

Ilango is real SUPER STAR.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இளங்கோ அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
எங்கள் ஊருக்குப் பக்கத்தில் புலவஞ்சி என்ற கிராமமும் மாதிரி கிரமமாக மிளிர்கிறது. அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் குடியரசு தலைவர் மற்றும் முதல்வர் விருது பெற்ற திரு.கோவி,பாலசுப்பிரமணியன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

வெட்டிப்பயல் said...

We salute you sir...

Great work...

சரண் said...

Natty, சுல்தான், மாதங்கி, ஜோதிபாரதி, வெட்டிபயல், அனைவரது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ஜோதிபாரதி, புலவஞ்சி கிராமத்தைப் பற்றி நீங்கள் ஒரு பதிவு எழுதலாமே...

Anonymous said...

இளங்கோவை சூப்பர் ஸ்டார் என்று சொல்லி இளங்கோவை கேவலப் படுத்த வேண்டாம்.

சரண் said...

அனானி, நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான்.. சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை..என்பது கெட்ட வார்த்தையாகி வருகிறது..

கயல்விழி said...

இளங்கோ பிரம்மிக்க வைக்கிறார், நல்ல பதிவு சூர்யா.

அனானி கமெண்டுக்கு ரிப்பீட்டு

சரண் said...

நன்றி கயல்விழி.

விஜய் டிவியில் வந்த இந்த நிகழ்ச்சியும் பல பிரமிக்க வைக்கும் மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது..
http://www.techsatish.net/2008/08/15/thamizhanendru-sollada-independence-day-special/

கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி..

குறிப்பாக இறுதியில் வரும் ‘அக்ஷ்யா'...