Tuesday, December 30, 2008

கெராமத்து விளையாட்டுக்கள் - 2

நூத்தாங்குச்சி:

தேவையானவை: 10 சின்ன ஈக்குமாத்து குச்சிகள் (பாதாங்கை நீளம்), ஒரு பெரிய ஈக்குமாத்துக்குச்சி (சின்னத விட ஒரு மடங்கு நீளம்)
ஆட்கள்: 2 அல்லது மேல்

மொதல்ல சின்னக்குச்சியெல்லாம் ஒட்டுக்கா சேத்து புடிச்சுக்கிட்டு, பெரிய குச்சிய நடுவால சொருகொணும். அப்புறம் எல்லாத்தயும் கீழ போடனும். மொதல்ல தனியாக் கிடக்கற சின்னக் குச்சிய எடுத்துட்டு, அந்தக் குச்சிய வெச்சு எல்லாக் குச்சியயும் அலுங்காம எடுக்கணும். அலுங்கிருச்சுன்னா ஆட்டம் முடிச்சது. சின்னக் குச்சிகெல்லாம் 10 புள்ளிகள். பெரிய குச்சிக்கு 100 புள்ளிகள். அதிக புள்ளிகள் எடுக்கரவங்க ஜெயிச்சவங்க..


தாயக்கரம் (அ) தாயம்

தேவையானவை: 2 தாயக்கட்டைகள் (அது இல்லீனா, ஒரு பக்கம் ஒரசிய 6 புளியங்கொட்டைகள் ),கரம், காய்களாக கற்கள் (அ) கொட்டமுத்துகள் (அ)உடைந்த ஓடுகள்

ஆட்கள்: 2 அல்லது மேல். (2 ஜோடியாக் கூட ஆடலாம்)

இதுதான் எங்கூருல நான் அதிகம் வெளையாண்ட வெளையாட்டு. சாயந்தரம் பொழுது எறங்கின உடனே, நானு, மோளயன் (மோகன்ராஜ்), பூவான் (பூபதி), சின்னசாமி, தொரயான், மாரப்பன், ஆழி எல்லாஞ் சேந்து ரொம்ப நேரம் ஆடுவோம். அப்பெல்லாம் நான் தோத்துட்டா பயங்கர கோவம் வந்து எல்லாரயும் அடிச்சுட்டு அழுவ ஆரம்பிச்சிடுவேன்..

பொதுவாத் தாயக்கட்டக மரத்திலேயோ, இரும்பிலேயோ இருக்கும்.
தாயக் கட்டையின் மூனு பக்கத்துல (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்துல புள்ளி ஏதும் இருக்காது (0). இந்த 2 தாயக் கட்டைகளை உருட்டினா 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) -ன்ற எண்கள் விழும். இதுல 1(தாயம்), 5, 6, 12 எண்கள் வந்தா மறுக்கா உருட்டலாம். இதே எண்கள் மறுக்கா மறுக்கா வந்தா ‘விருத்தம்'-ன்னு சொல்லுவோம்.

ஒரு சிலருக்கு நல்லா விருத்தம் விழும்..


எங்கூர்ல கரம் இப்படித்தானிருக்கும்.



மொதல்ல ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனக்குன்னு காய்கள (4 அல்லது 6) எடுத்து நடுவால மனைல வெச்சுக்கனும்.

யாரு மொதல்ல தாயம் (1) போடறாங்களோ அவங்கதான் காய் நகத்தத் தொடங்கனும். இதனால மொதல்ல கொஞ்சனேரம் ‘தாயமா.. தாயம்மா'-ன்னு கிண்டலா போய்ட்டிருக்கும்.


ஒரு கட்டத்தில ஒரு ஆட்டக்காரரோட காய்களே இருக்க முடியும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில நுழைஞ்சா முதலிருந்த காய்கள வெட்டனும். காய் வெட்டப் பட்ட பின்னாடி மனைக்கு திரும்பிபோய் மறுபடியும் தாயமோ, அஞ்சோ போட்டுத்தான் வெளிய வரமுடியும்.

குறுக்க கோடுகள் இருக்குர கட்டங்கள மலைன்னு சொல்லுவோம். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்கலாம். இதுல இருக்கறக் காய்கள வெட்ட முடியாது.

1, 5, 6, அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. எதிராளி காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு.

ஒரு முறை சுத்தி வந்த பின்னாடி திரும்பவும் மனைக்குள் போலாம். இதப் பழத்துக்குப் போறதுன்னு சொல்லுவோம். பழத்துக்குப் போகும்போது கட்டத்து வழியாப் போகாம நடுவால இருக்கர கோடு வழியா காய்கள் போகும்.

ஆனால் எதிராளியோட காய்கள முன்னமே வெட்டாம பழத்துக்குப் போக முடியாது.

முதல்ல யாரு எல்லாக் காயயும் பழமாக்குகிறார்களோ அவங்களெ ஜெயிச்சவங்க.

எதிராளி உங்கள வெட்டாம நீங்க அவங்கள வெட்டி எல்லாக் காயயும் பழமாக்கிட்டா எதிராளி 'வெட்டாக்கூல்'.

- ஆட்டம் தொடரும் -

Thursday, December 25, 2008

கெராமத்து வெளயாட்டுக்கள் -1

பழமப் பேசி அப்பங்கிட்ட எருக்கம்பூவப் பத்தி பேசிட்டிருக்கும் போது, சிறுசுவகளா இருக்கரப்ப நாமெல்லாம் வெளயாடின வெளயாட்டுகள பத்தி ஒரு பதிவு போடணும்ன்னு சொல்லிட்டிருந்தோம்.

சரி.. நாம வெளயாண்ட வெயாட்டெல்லாம் என்னென்னனு யோசிச்சு, ஆத்தாக்கிட்டயும், தங்கமணிக்கிட்டயும் நோண்டி நோண்டிக் கேட்டு அதெல்லாம் நாமலே எழுதலாம்னு..

இதுவரைக்கும் ஒரு பத்து வெளயாட்டு தேறியிருக்கு. அதுல ஒண்ணொன்னா சொல்லறேன்..கேட்டுக்கோங்க..

நீங்களும் இந்த வெளயாட்டெல்லம் வெளயாடி இருப்பீங்க.. இதெல்லாம் எங்கூருல (கொங்கு நாடு: ஈரோடு: மொடக்குறிச்சி) மாடு மேக்கறப்ப தோட்டந்தொரவுல வெளயாண்டது.. உங்கூருலயும் வெளயாடியிருப்பீங்க.. ஆனா கொஞ்ச வேற மாதிரி இருக்கலாம்.. அதெல்லாம் சொல்லுங்க..

Our Village...


அப்புறம்.. முக்கியமா ‘பழம பேசி' அப்பனுக்கு நன்றி சொல்லிக்க கடமை பட்டிருக்கேன். அவருதான் இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் முன் மாதிரி.


மொத வெளையாட்டு:

1)அஞ்சாங்கல்:

பொதுவாச் சொல்லணும்னா கல்லத் தூக்கிப்போட்டு அடைப்பு (‘') குறிக்குள்ளார உள்ளப் பாட்டச் சொல்லிட்டே கல்லப் பொறுக்கர வெளையாட்டு. கைய்யும் கண்ணும் நல்லா ஒட்டுக்கா வேல செய்யணும். (Hand - Eye Coordination). இது பொதுவா அம்மணிகளோட வெளையாட்டு.
பசங்களும் வெளயாடலாம்.. ஒன்ணும் தப்பில்ல..

தேவையான விளையாட்டுப் பொருட்கள்: 5 கற்கள் (வெங்கச்சாங்கற்கள்).
ஆட்கள்: 2 பேர், அல்லது அதற்கு மேல்.

1: முதலாட்டம் - ‘ஒண்ணாநம்மா ஊசிமேல ஊசி'

அஞ்சு கல்லையும் கையில எடுத்து வீசணும். கல்லெல்லாம் ஒன்னுகொன்னு முட்டாம இருகிறது நல்லது. அதுல ஒரு கல்ல எடுத்து மேல நேரா வீசிப்போட்டு, கீழருக்கற ஏதொருக் கல்ல எடுத்ததுக்கப்புறம் மேல வீசுன கல்லயும் அதே கையில புடிக்கோணும். இப்படியே “ஒவ்வொண்ணா” மத்தக் கல்லையெல்லாம் எடுத்து முடிச்சுட்டா முதலாட்டம் முடிஞ்சது. இதுல எப்பவாவது மேல வீசுன கல்ல புடிக்காம வுட்டாலோ, கீழிருக்கற கல்ல எடுக்காம விட்டாலோ, ஒரு கல்ல எடுக்கும் போது மத்த கல்ல அலுங்கினாலோ (அசைச்சாலோ) ஆட்டம் அடுத்தாளுக்கு. அடுத்தாளும் இதே மாதிரி அஞ்சாட்டத்துக்குல்லார உட்டுட்டா ஆட்டம் உங்களுக்கே மறுபடியும் வரும். நீங்க மறுபடியும் எங்க உட்டீங்களோ அங்கிருந்து மறுபடியும் ஆரம்பிக்கோனும்.

2: ரண்டாம் ஆட்டம் - ‘ரெண்டானம்மா ரத்தினக்கிளி'

மறுபடியும் அஞ்சு கல்லயும் கையில எடுத்து வீசணும். இப்ப நாலு கல்லுக, ரண்டு சோடியா இருந்தா நல்லது. (எல்லாம் ஒரு நேக்குதான். வெளையாட வெளையாடத் தானா வந்துரும்.)
இப்ப சோடியா (அல்லது பக்கம் பக்கமா) இருக்கற நாலு கல்ல வுட்டுட்டு, ஒரு கல்ல எடுத்து வீசிப்போட்டு, ரெண்டு கல்ல ஒட்டுக்கா எடுத்த பின்னாடி மேல வீசுன கல்ல அதே கையில புடிக்கோணும். மொதல்ல சொன்னமாதிரியே, எதயும் வுட்டுரக்கூடாது, மத்த கல்லயும் அலுங்காம எடுக்கணும்.

3: மூணாம் ஆட்டம் - 'மூணானம்மா முத்துச்சரம்'

இப்ப அஞ்சுகல்ல எடுத்து வீசும்போது மூணு கல்லுக ஒட்டுக்கா இருக்கர மாதிரி வீசணும்.
மூணு கல்ல ஒட்டுக்கா எடுத்துட்டு, தனியா இருக்கற ஒரு கல்ல எடுக்கணும். ஒரு கல்ல மொதல்ல எடுத்துட்டு மூணு கல்ல மறுக்காக் கூட எடுக்கலாம்.

4: நாலாம் ஆட்டம் - ‘நாலானம்மா நாகேஸ்வரம்'

இந்தாட்டம் கொஞ்சம் வேற மாதிரி வெளையாடோனும். அஞ்சு கல்லயும் கயில வெச்சுட்டு அதுல ஒரு கல்ல மேல வீசோணும். அந்தக் கல்லு மேல போயிட்டு வரதுக்குல்லார மீதி நாலு கல்லயும் கீழ ஒட்டுக்கா வெச்சுட்டு, மொதக்கல்லப் புடிக்கோணும். அப்புறம் மொத மூணு ஆட்டமாறியே அந்தக் கல்ல வீசிப்போட்டு கீழிருக்கற நாலு கல்லயும் ஒட்டுக்கா
எடுக்கொணும்.

5: அஞ்சாம் ஆட்டம் - ‘அஞ்சானம்மா பஞ்சலிங்கம்'

இது ரொம்ப முக்கியம்மான ஆட்டம். இந்த ஆட்டத்துக்குள்ளாரயே பத்து ஆட்டம் இருக்குது.

5.1: ‘குத்தாலக்க'

இதுல நாலாம் ஆட்டம் மாறியே அஞ்சு கல்லயும் கையில வெச்சுட்டு அதுல ஒரு கல்லத் தூக்கிப்போட்டு, அதே கையில ஆட்காட்டி விரலால சுண்டி கீழ நெலத்தத் தொடணும்.


5.2: ‘கோழிப்பிய்யி'

இது 'குத்தாலக்க' வோட 'ர்ர்ரிப்ப்பீட்ட்டு'

5.3: ‘வெச்செடுப்பேன்'

இதுவும் நாலாம் ஆட்டம் மாறியே அஞ்சு கல்லயும் கயில வெச்சுட்டு அதுல ஒரு கல்ல மேல வீசிட்டு மீதி நாலு கல்லயும் கீழ ஒட்டுக்கா வெச்சுட்டு, மொதக்கல்லப் புடிக்கோணும்.


5.4: 'தப்புக் குப்பு'

இப்ப நாலு கல்லு கீழிருக்கும். ஒரு கல்லு உங்க கையில இருக்கும். இப்ப கையிலிருக்கற ஒரு கல்லத் தூக்கிப்போட்டு ரெண்டு கையாலயும் கீழ நெலத்தத் தட்டணும். அப்புறம் மேல போன கல்லப் புடிக்கோணும்.

5.5: ‘வாரி வளி'

இப்ப கையிலிருக்கற ஒரு கல்லத் தூக்கிப்போட்டு, கீழிருக்கற கல்லையெல்லாம் எடுத்துட்டு வீசுண கல்லப் புடிக்கோனும்.

5.6: 'சிணுக்கு'

ஆட்டத்தோட முக்கியமான கட்டம். போன ஆட்டத்துக்கப்புறம் உங்க உள்ளாங்கைய்ல அஞ்சு கல்லும் இருக்கும். அந்த கல்லையெல்லாம் தூக்கிப்போட்டு பொறங்கையால புடிக்கணும். முடிஞ்சவரைக்கும் கொஞ்சமா புடிக்கிறது நல்லது. ஆனா அதுக்கு முயற்சி பண்ணினா எல்லாக் கல்லயும் உட்டுருவீங்க.. பாத்துக்கொணும். அப்படியே எதயும் புடிக்காம வுட்டுட்டா உடனே ‘மொட்டக்கையில மோரூத்து' - ன்னு சொல்லிட்டா எதிராளி மறுபடியும் கல்லெல்லாம் உங்க கயில குடுக்கொணும். ஆனா நீங்க சொல்லறதுக்கு முன்னாடி எதிராளி ‘தூ' சொல்லீட்டா உங்காட்டம் காலி.
இப்ப பொறங்கையில இருக்கற கல்ல அப்படியே வீசி புடிக்கொணும். இப்ப உங்க உள்ளாங்கையி கீழ நெலத்தப் பாத்துத்தான் இருக்கொணும். அதாவது வீசுன கல்ல சொக்கிப் புடிக்கோனும். இதுல ரொம்ப முக்கியம் வீசுன கல்ல எல்லாம் புடிக்கொனும். அதனாலதான் மொதல்ல கொஞ்சமா கல்லப் புடிக்கோணுங்கறது.

5.7: ‘சித்திராங்கி'

புடிச்சகல்லயெல்லாம் சிணுக்கு ஆட்டமாரியே மறுபடியும் வெளையாடொணும்.

5.8: 'முத்துமால'

இதுவும் சித்திராங்கி மாரியேதான்.

5.9: 'காட்டங்கருங்கல்'

அஞ்சு கல்லையும் எடுத்து வீசி பொறங்கையில புடிச்சு, எதிராளிய புடிச்ச கல்லுல ஏதோன்ன தொடச்சொல்லோனும். எந்தக் கல்லத் தொடறாங்களோ அந்தக் கல்லப் சொக்கிப்பொட்டு புடிக்கொனும். எதிராளி வெவரமானவனா இருந்தா புடிக்க முடியாத ஒரு கல்ல தொடுவாங்க. நீங்க இன்னும் வெவரமா ஒரே ஒரு கல்ல மட்டும் புடிக்கலாம். ஆனா ஆட்டத்தோட தொடக்கத்திலேயெ இது ஒத்துக்கப்படுமா படாதான்னு பேசி முடிவு பண்ணிக்கறது நல்லது.

5:10: ‘பணம் பொறுக்கி'

இது அஞ்சாங்கல் ஆட்டத்தோட கடைசி, அப்புறம் இது மொதலாட்டாம் மாரியேதான். கையிலிருக்கற கல்ல வீசிப்போட்டு கீழிருக்கற கல்ல ஒவ்வொண்ணா எடுக்கறது.

இந்த ஆட்டம் வரைக்கும் யாரு மொதல்ல முடிக்கறாங்களோ அவங்கதான் ஆட்டத்துல செயிச்சவங்க...


ரெண்டாவது வெளையாட்டு:

2)அச்சாங்கல்:

இந்தாட்டம் அஞ்சாங்கல் ஆட்டத்தோட இன்னொரு மாதிரி. நாலு கல்லுக சேந்தா ஒரு ‘அச்சு'

தேவையான விளையாட்டுப் பொருட்கள்: குறைந்தது 16+1 கற்கள் (4 அச்சு + 1 தாச்சாங்கல்).
ஆட்கள்: 2 அல்லது மேல்.

எல்லாக் கல்லயும் தூக்கிப் போட்டு போறங்கையில புடிக்கோணும். புடிச்ச கல்லயேல்லாம் அப்படியே தூக்கிப்போட்டு மறுக்கா உள்ளங்கையில புடிக்கோனும். இதுல எந்தக் கல்லையும் வுட்டறக் கூடாது.
எத்தன கல்லப் புடிக்கறீங்களோ அதையெல்லாம் அச்சு அச்சா பிரிச்சு வெச்சுக்கணும். அச்சு சேர்ரதுக்கு முன்னாடி வுட்டுட்டா அச்சு சேராத கல் எல்லாத்தயும் எதிராளிக்கு கொடுத்தடனும்.
ஒரு ஆட்டம் முடிவுல யாரு கம்மியா அச்சு சேத்தியிருகாங்களோ அவங்க எல்லாத்தயும் கொடுத்து அதிக அச்சு சேத்துனவங்க அதிகமா சேத்துனத வெச்சுக்கிட்டு மீதிய போட்டு மறுபடியும் வெளயாடனும். இப்படி யாரு எல்லா அச்சயும் எடுக்கறாங்களோ அவங்க செயிச்சவங்க.
இதுல தோத்தவங்களுக்கு பருப்புக்கலியாணம் பண்ணி அவமானப் படுத்துவதும் உண்டு.
பருப்பு கலியாணம்: ரெண்டு கையயும் பிச்சையெடுப்பது போல் வைத்து, மண்ணைப் போட்டு அதில் ஒரு சின்னக் குச்சியை நட்டு வெச்சுட்டு, எச்சையெல்லாம் துப்பி, கண்ணைக் கட்டி கொஞ்ச தூரம் கொண்டுபோய் கையிலிருக்கறதையெல்லாம் கீழே போடச் சொல்லிட்டு, தல கிறுகிறுக்க சுத்து சுத்துனு சுத்தி ஆரம்பிச்ச எடத்துக்கெ வந்து, கண் கட்ட அவுத்துட்டுட்டு, மறுபடியும் போய் அந்தக் குச்சிய கண்டுபிடிச்சு எடுத்தாரனும்.
இந்தக் கலியானத்துக்கு பயந்துட்டு ஆட்டத்துல பாதியிலேயே எந்திரிச்சு எதிராளி ஓடாமப் பாத்துகரது உங்க சமார்த்தியம்..!


<ஆட்டம் தொடரும்>

Monday, December 22, 2008

நிழல்கள்... பட விளக்கம்..

PIT போட்டியில் பங்கேற்ற 49 படங்களில் நம்மப் படம் முதல் பத்தில் ஒன்றாக தேர்வாகியிருகிறது..!!!

Evening sand dunes

இந்தப் படத்திற்கு பின்னூட்டம் அளித்த ராமலக்‌ஷ்மி, துளசி, ஜீவா, Athi, CVR, கிரண், கார்த்திக், சர்வேசன் அனைவருக்கும் நன்றி.

குறிப்பாக, CVR-ன் இந்தக் கருத்திற்கு சிறு விளக்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்..

”No clear point to focus..and also shadows dont all that value to the subject..”

எனக்கும் இந்தப் படத்தைத் தேர்வு செய்யும்போது இதேப் போன்ற என்ணம் தான் தோன்றியது..

ஆனால் சிறிது சிந்தித்துப் பார்த்ததில்,
1) ஒரு சில சிறந்த இயற்கைக் காட்சிப் படங்களில் 'point of focus' இல்லாமலிருந்தும் ரசித்திருக்கிறேன்...

2) மணற்பறப்பில் உள்ள வரிகள் சிறு சிறு நிழல்களிலாலேயே உருவாகியிருக்கிறது..
அந்த வகையில் 'நிழல்' பெருபான்மையாக இல்லாவிட்டாலும் முக்கியமான பங்களித்திருக்கிறது என்று நம்பத்தோன்றியது..


எப்படியோ சிறந்தப் பத்துப் படங்களில் ஒன்றாகத் தேர்வானது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

படத்தைத் தேர்வு செய்த நடுவர்களுக்கு மிக்க நன்றி.. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Monday, December 1, 2008

சாவின்(?) பள்ளத்தாக்கு (Death Valley)

இந்த வார 'நன்றி கொடுக்கும்' (thanksgiving?)விடுமுறை நாட்களுக்கு சாவின் பள்ளத்தாக்கு -க்குப்( death valley- தமிழ்ல எப்படிங்க சொல்றது?) போயிருந்தோம்..

பாலைவனத்துல என்ன பார்க்க இருக்கப்போகிறது என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் ரொம்பவும் அசத்திய மிக அழகான இடம்..

நான் வார்த்தைகளால் சொல்வதைவிட, இந்தப் புகைப்படங்களை சாட்சியாக வைக்கிறேன்...

நேருக்கு நேர்:
Path to paradise 'death valley'

பளபளக்கும்..
Straight to sky..

பாலைவனச்சோலை:
Evening sand dunes

தனிமையிலே..
Lonely chair...

எகிரிக்குதித்தேன்.. வானம் இடித்தது..
எகிரிக் குதித்தேன்... வானம் இடித்தது..

சிறகடிக்க ஆசை..:
சிறகடிக்க ஆசை..

அமெரிக்காவில் புகைப்படங்களில் ஆர்வம் இருப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாகச் செல்ல வேண்டிய இடம் இது...

Friday, September 19, 2008

கற்றது தமிழ் : பிடித்ததும், வெறுத்ததும்..

படம் வந்து இவ்வளவு நாள் கழித்து, ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக' ஒளிபரப்பிய பின் எதற்கு இந்த விமர்சனம்?

'குப்பை வலையில்' 2 வாரத்துக்கு முன் 'கற்றது தமிழ், செத்தது ரசனை!' என்றத் தலைப்பிலான பதிவைப் படித்தபின் கீழிருக்கும் பின்னூட்டத்தை இட்டிருந்தேன்.

'இன்னும் நான் படம் பார்க்கவில்லை.. ஆனால் ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. கடற்கரையில் காதல் செய்து கொண்டிருக்கும் காதலர்களை கொல்லும் காட்சி. படு முட்டாள்தனமாகப் பட்டது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் தமிழனை இதைவிடக் கேவலப் படுத்த முடியாது என்று தோன்றியது. அதனால் படம் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இப்பதிவைப் படித்ததும் அந்த முடிவு சரிதான் என்று படுகிறது. நன்றி'

நான் பார்த்த ஒரு காட்சி: கடற்கரையில் காதலர்களை நாயகன் சுடும் காட்சியும் அதை ஒத்த வசனங்களும். அக்காட்சியைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய எண்ணம், ‘இது அவனது சொந்த கையாலாகாதத் தனத்தையே காட்டுகிறது.. இதற்கும் தமிழ் படிப்பதற்கும் என்ன சம்மந்தம்? தமிழ் படிக்கிறவன் இதைத்தான் செய்வான் என்று கூறி தமிழனை இதற்கு மேல் அவமானப் படுத்த முடியாது'


இதனைப் படித்த தமிழ்ப்பறவை said...

''குப்பை' எனும் வலைப்பூவில் 'கற்றது தமிழ்' படத்தைப் பற்றிய தங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு காட்சியை மட்டும் வைத்து படத்தை எடை போடாதீர்கள்..
கதையின் கருத்து எப்படியோ, படமாக்கிய விதம், ஒளிப்பதிவு, இசை எனப் பல விஷயங்கள் உள்ளன..
படத்துக்கான எதிர்வினைகள் வலைப்பூவில் தீவிரமாக இருந்தது.. காரனம் உங்களுக்கே தெரியும்...
முடிந்தால் மூன்று ம்ணி நேரம் செலவழித்துப் படம் பாருங்கள்( எந்த விமர்சனத்தையும் நினைத்துப்பாராமல்) பின்பு நீங்கள் விமர்சியுங்கள் படம் குப்பையா இல்லை மோசமான குப்பையா எதுவாயினும் தெரிவியுங்கள்..
ஒரு நண்பராகக் கூறுகிறேன்.. பின் படம் பார்ப்பதும், பார்க்காததும், படம் உங்களுக்குப் பிடிப்பதும்,பிடிக்காததும் வேறு விஷயம்..


- என்று கூறியிருந்தார்.

நேற்று படத்தை ‘முழுவதும்' பார்த்தேன்..

முதலில் படத்தில் பிடித்தவைகள்:

1) நடிகர்கள், நடிப்பு: கதை நாயகனிலிருந்து, அவனது நண்பனாக வந்து அடி வாங்கிப் போகும் ஆள் வரை... முகங்களின் தேர்வு கனக்கச்சிதம். ஒரு காட்சியில் வந்து போகும் நாயகியின் மாமா கூட அவ்வளவு பொருத்தம். இது வரை எந்தவொரு படத்திலும் இவ்வளவு அருமையான, பொருத்தமான முகங்களைப் பார்த்ததில்லை. அது சுலபமான வேலையும் இல்லை. இயக்குனர் இதில் தனித்திறமை பெற்றிருக்கிறார். அனைவரும் இயல்பான காட்சியமைப்புகளில் மிக இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்.
பின்னனி (dupping sound) கொடுக்காமல் நேரடியாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்களோ என்று தோன்றியது.

2)ஒளிப்பதிவு: 'கலக்கல்'!!!!! ஒளிப்பதிவாளர் கதிர் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து பதித்துள்ளார். படத்தில் வந்த முகங்கள் அவ்வளவு இயல்பாக இருந்ததற்கு இவரது பங்கும் முக்கியமான ஒன்று. நிறைய 'காட்சிகள்' ஓவியமாகத் தோன்றியது. இவரது வேறு படங்கள் யாருக்காவது தெரிந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள். பார்க்க வேண்டும்.


3) கருத்து: இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வந்த கருத்தாக எனக்குத் தோன்றியது 'ஒரு சமூகத்தில் ஒரு சாரார் மட்டுமே பணம் சேர்ப்பதும் ஒரு சாராருக்கு எதுவும் கிடைக்காமல் போவதும் கூடிய சீக்கிரத்தில் குற்றங்களை அதிகரிக்கச் செய்யும்.' இது முற்றிலும் உண்மை. நம்மைப் போன்று IT-யில் வேலை செய்பவர்கள் சம்பாதிக்கும் பணம் சராசரி மக்களின் சம்பளம் (நம்மை விட பல மடங்கு உழைத்தும்) பல மடங்குக் குறைவு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான மக்களின் கோபமும் அங்கலாப்பும் நியாயமானதே..

இனி படத்தில் வெறுத்தவைகள்:

நல்ல கருத்து, அட்டகாசமான நடிகர் தேர்வு, அருமையான ஒளிப்பதிவு, குறைகளில்லாத இசை.. இவை அத்தனையும் ‘விழலுக்கு இறைத்த நீர்', ‘குரங்கு கையில் பூமாலை'.

சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளைச் சொல்ல ‘கற்றது தமிழ்' என்ற தலைப்பு எதற்கு என்று புரியவில்லை.
நாயகன் ஏன் நிறையத் தமிழ் வசனத்திற்கு அப்புறம் ஆங்கிலத்தில் திருப்பிச் சொல்லுகிறான் என்பதும் புரிய வில்லை.

தமிழ் படிப்பதால் உள்ள பிரச்சினைகளை சொல்வதா? பிராபாகரன்- ஆனந்தியின் காதலைச் சொல்லுவதா? சமூகப் பிரச்சினைகளைச் சொல்வதா? என்று இயக்குனர் குழம்பி..சரி எல்லாவற்றயும் சொல்லிவிடுவோம்.. என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு காட்சி வைத்து.. ஒரு தொடர்ச்சியில்லாமல் செய்து விட்டார்.

இயக்குனருக்கு முதல் படம் என்று நினைக்கிறேன். முதல் படம் நன்றாக அமைய வேண்டும் என்ற தவிப்போ என்னவோ, தன் மனதில் உள்ள எல்லா எண்ணங்களையும் காட்சிகளாக்க வேண்டும் என்று எடுத்திருப்பதால் பல காட்சிகள் மனதில் பதிய மறுக்கிறது. கடைசி 10 நிமிடங்களைத் தவிர மீதி நேரங்களில் படத்தில் கவனம் செலுத்துமளவிற்கு காட்சி அமைப்புகள் இல்லை.

படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் சிறு பிள்ளைத்தனமான காட்சி வரிசைகளால் வீணடித்திருக்கிறார். உதாரணத்திற்கு, நாயகனுக்கும், அவரது தமிழாசிரியற்கும் வரும் பாடல்.. தமிழாசிரியரை அதற்கு முந்தைய காட்சியில் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர் யார் என்று உணரும் முன்பே பாடல் வந்து விடுகிறது.

அப்புறம் இந்த கதை சொல்லும் பாணி.. நாயகன், ஒருவனைப் பிடித்து அவனிடம் தன்னுடைய பராக்கிரமங்கள் எல்லாம் சொல்லுவது போல்.. படம் முழுவதும் நாயகனின் குரல் ஒவ்வொரு காட்சியிலும் விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பது.. சகிக்கவில்லை. இது ஒரு கடைந்தெடுத்த அமெச்சூர்த்தனம். இதற்கு திரைப்படம் தேவையில்லை. ஒரு வானொலி நாடகமோ புத்தகமோ போதும்.

இப்போதுள்ள பல புதிய இயக்குனர்கள் நல்ல கதை எழுதுகிறார்கள். அவர்களிடம் நல்ல நல்ல கருத்துக்கள் இருக்கிறது. ஆனால் அவர்கள் திரைக்கதையை ரொம்பவும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இதில் சேரன் ஒரு சிறந்த உதாரணம் (பாரதி கண்ணம்மா தவிர்த்து).

ஒரு பைத்தியக்காரனை தமிழ் படித்தவனாக காட்டி, கற்றது தமிழ் என்று அழகானத் தலைப்பு வைத்து, அவன் செய்யும் பைத்தியத்தனமான வேலைகளை தமிழ் படித்தவன் செய்யும் செய்கைகளாக செய்து தமிழர்களை கேவலப்படுத்தியிருப்பது வெறுப்பாக இருந்தது.

இந்தக் கதையையும், காட்சிகளையும் பிரித்து 'நெஜமாத்தான் சொல்றியா?' என்ற ஒரு அழகான காதல் படமாகவும், 'பைத்தியக்காரன்' என்ற சமூகப் புரட்சிப் படமாகவும் எடுத்து விட்டு, ஒரு தேர்ந்த திரைக்கதையுடன் ‘கற்றது தமிழ்' என்ற தலைப்பில் தமிழ் வழிக் கல்வி படிப்பதால் உள்ள உண்மையான பிரச்சினைகளை மட்டுமே வைத்து ஒரு படமாகவும் எடுத்திருந்தால் கண்டிப்பாக 3 படங்களும் ரசிக்கும் படியாகவும் இருந்திருக்கும், வெற்றியும் பெற்றிருக்கும். நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், மற்றும் இதர திறமையாளர்களின் உழைப்பும் வீணாகியிருக்காது.

Thursday, September 18, 2008

'கட்டிடக்கலை' - தனித்து நின்ற படங்கள்

'கட்டிடக்கலை' என்றத் தலைப்பில் இந்த மாதப் PIT போட்டியில் பங்கேற்ற புகைப்படங்களில் காட்சியடக்கம் மற்றும் தொழில்நுற்பத்தில் சரியாகவும், அழகானதாகவும் இருந்ததோடு, ஒரு பொதுவானதொரு விஷயத்தை மனதில் தோற்றுவிப்பதாகவும், கட்டிடக்கலை சார்ந்த ஒரு உணர்வையும் (அது ஒரு சமூக சிந்தனையாகவோ, நம்மில் பெரும்பாலோனோரின் பழைய நினைவாகவும் இருக்கலாம்) மனதில் நினைக்க வைப்பதாகவும் இருந்தப் படங்களாக நான் மிகவும் ரசித்தது..



நாதனின் இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன். அத்தனைப் படங்களுக்கு மத்தியிலும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வைத்த படம். சிதிலமடைந்த அந்தக் கதவில் இருக்கும் நுணுக்கமான கலையமைப்பு நிறைய சொல்லுகிறது. இந்த வருடம் ஊருக்கு சென்றிருந்த போது, இதே போன்று எங்கள் கிராமத்தில் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீடுகளைப் பார்த்த போது, எத்தனை கதைகளின், நினைவுகளின் மிச்சமாக இருந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கவைத்தது.



இந்தப் படம் நம்மூர் பள்ளிக்கூடங்கள் பலவற்றை நினைவு படுத்துவதாக இருந்தது. சிதிலமடந்த தூண்களில் தெரியும் செங்கற்கள் அருமை. தளமும், ஒளியமைப்பும் அட்டகாசமாக அமைந்த படம்.

இந்த மாதிரி கட்டிடங்களும், இப்போது பளப்பளத்துக் கொண்டிருக்கும் பல கட்டிடங்களுக்கு இணையான, அல்லது அதற்கு அதிகமான உழைப்பில் தான் கட்டப்பட்டிருக்கும்.

தனது கடின உழைப்பால் பணக்காரனாகவும், செழிப்பாகவும் உயர்ந்தவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நம் சமுதாயம், அதே அல்லது அதற்கு மேலும் உழைத்தும் கெட்ட நேரத்தாலோ, சரியான வாய்ப்புகள் அமையாமல் நொடிந்து போனவர்களை கண்டுகொள்வதில்லை. அது போலவே இப்படங்களும்..

காலத்தால் அழிந்து போன நமது பழைய வீடுகளின் மிச்சத்தை கலையழகுடன் பதித்திருக்கும் நாதனின் படமும், கலையழகுடன் இருந்து இப்போது அழிந்துபோன ஒரு கட்டிடத்தைப் பதித்திருக்கும் அமலின் படமும், பல புதிய கட்டிடப் படங்களுக்கு மத்தியில் தனித்திருந்தால் என்னை மிகவும் கவர்ந்தது.


இதெல்லாம் சொல்லிவிட்டு, நம்மப் படத்தப் பத்தி நாமே சொல்லலைனா வேற யார் சொல்லப்போறா..?

An hall with thousand pillars

கட்டிடக்கலை என்ற தலைப்பு என்றதும் நமது மாமல்லபுரம், மதுரை மீனாட்சி கோவில், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கனாதர் ஆலயம், மற்றும் தென்தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்கள் தான் என் நினைவிற்கு வந்தன. நம் நாட்டில் இருப்பவர்களிடமிருந்து இந்தக் கோவில்களின் படம் எதுவும் வராதது கொஞ்சம் எமாற்றமாக இருந்தது.

நமது கோயில்களில் உள்ள கட்டிடக் கலையின் அழகை எப்போது பார்த்தாலும் வியப்பதுண்டு.. அதே சமயத்தில் கவனிப்பாரற்றும், பராமரிப்பற்றும் சிதிலமடைந்து காணப்படும் பல கோயில்களைப் பார்க்கும் போது மனம் கனக்கும். மற்ற நாடுகளில் உள்ளக் கட்டிடக்கலையை அதன் பளபளப்பிலும் விளம்பரத்திலும் மயங்கி பாராட்டும் நம்மூர் காரங்களைப் பார்த்தால் கோபமாக வரும். நம் நாட்டுக்கோயில்களில் உள்ள கட்டிடக்கலையின் அற்புதத்தில் பாதி கூட இல்லாத கட்டிடங்களை, தலையில் தூக்கி வைத்து ஆடும் போது அங்கலாப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கும்.

நம் நாட்டின் கட்டிடக் கலையின் பெருமையையும்(ஆயிரம் தூண்கள்), அதன் பழமையயும் (கருப்பு வெள்ளை)கவனிப்பாரற்று கிடக்கும் நிலைமையையும்(தளத்தில் கிடக்கும் குப்பை) இப்படம் சிறிதளவேனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.

Saturday, September 13, 2008

கட்டிடக்கலை - PIT மெகாப் போட்டி

”கட்டிடக்கலை” தலைப்புக்காக நான் எடுத்தப் படங்கள்ல ஆறு படங்கள் உங்கள் வோட்டுக்காக..
இதில் எந்தப் படத்தை போட்டிக்கு அனுப்புறதுன்னுத் தெரியலை..
உங்களுக்கு எது புடிச்சிருக்குன்னு சொன்னீங்கனா ரொம்ப உதவியா இருக்கும்..
------------------------------------------------------------------

பதிவிற்கு வந்து வோட்டளித்தவர்களுக்கும், கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கும் நன்றி..

ஆறு படங்களில், மூன்றைத் தெரிவு செய்து.. மேலும் சுயவிமர்சனம் செய்து பார்த்ததில்..

படம் 3:

இரவு நேரத்தில் முக்காலி வைத்து எடுத்தது.. மிக நன்றாக வந்திருந்திருக்கிறது.. படத்திலிருக்கும் இந்த இடமும் மிகவும் பிடிக்கும். Technical - ஆகவும், பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ‘கட்டிடக்கலை' என்ற தலைப்பில் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இல்லை என்று கருதுகிறேன்.




படம் 2:

மிகவும் பிடித்த படம்.. இந்தப் படத்தில் 2 leading lines சூரியனின் ஒளிக்கீற்றும், மண்டபப் பாதையும்.. 'கடவுள் அவ்வப்போது வேறு நல்ல ஒளிமயமான மாற்றுப்பாதைகளை காட்டுவார்.. ஆனால் சில நேரங்களில் அவற்றை கவனிக்காமல் நமக்கு விதித்தப் பாதையிலேயே நாம் செல்வோம்' - இது இப்படத்தினால் எனக்குத் தோன்றிய தத்துவம்... (என்னக் கொடுமை சரவணன்...?) மறுபடியும் 'கட்டிடக்கலை' என்ற தலைப்பிற்கு இன்னும் முழு பொருத்தமாக இல்லையோ என்றே நினைக்கிறேன்..




படம் 1: (போட்டியில் பங்கேற்பது)

2 ஓட்டுகள்(!) பெற்று வெற்றி பெற்ற படம். ‘பெரும்பான்மையோரின்' கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்..!!

நமது கோயில்களில் உள்ள கட்டிடக் கலையின் அழகை எப்போது பார்த்தாலும் வியப்பதுண்டு.. அதே சமயத்தில் கவனிப்பாரற்றும், பராமரிப்பற்றும் சிதிலமடைந்து காணப்படும் பல கோயில்களைப் பார்க்கும் போது மனம் கனக்கும். இங்கு அமெரிக்காவில், நம் நாட்டுக்கோயில்களில் உள்ள கட்டிடக்கலையின் அற்புதத்தில் பாதி கூட இல்லாத கட்டிடங்களை, தலையில் தூக்கி வைத்து ஆடும் போது அங்கலாப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கும்.

துள்ளியமாகவும், அவ்வளவு அழகாக இல்லாமல் போனாலும், நம் நாட்டின் கட்டிடக் கலையின் பெருமையையும், கவனிப்பாரற்று கிடக்கும் நிலைமையையும் இப்படம் சிறிதளவேனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.

அதனால் நெல்லையப்பர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் எடுத்த இப்படத்தையேப் போட்டிக்கு...




இன்னும் கொஞ்சம் மெருகேற்றிய பின்..






மற்றப் படங்கள்..











Friday, August 22, 2008

தெய்வீக ராகம்.... ஜென்சி

இந்த வார குமுதம் இவ்வளவு நாள் நான் கேட்கும்போதெல்லாம் மெய்மறக்கும் ஒரு தெய்வீக குரலுக்கு முகம் கொடுத்துள்ளது...

ஜென்சி...



'சில்லிட வைக்கும் பனிக்காற்றில் பச்சைப்பசேல் மலைச்சாரலில் நடந்து வருவதுபோல் இருக்கும்.ஜென்சியின் குரல்.'

எவ்வளவு சத்தியமான வார்த்தை..

`தம்தன தம்தன... தாளம் வரும்', `என் வானிலே...' `தெய்வீக ராகம்', `அடிப்பெண்ணே', `இரு பறவைகள் மலை முழுவதும்', `மயிலே மயிலே உன் தோகை எங்கே...' 'ஆயிரம் மலர்களே மலருங்கள்...', ‘மீன் கொடித் தேரில்'.

எப்பொழுது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.... இவர் அதிகம் பாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் நாம் நிறைய இழந்துவிட்டோம்!! ஆனாலும் இதுவரை நமக்கு கிடைத்தது எல்லாம் பொக்கிஷங்கள்..




என்னிடம் இவரது பெரும்பான்யானப் பாடல்கள் இருக்கின்றன.. ஆனால் எப்படி இந்த வளைத்தளத்தில் பகிர்ந்துகொள்வது என்று தெரியாததால்..odeo.com வளைத்தளத்தில் கிடைத்த ஒரு தொகுப்பை இங்கு கொடுத்துள்ளேன்.. கேட்டு மகிழுங்கள்!!!













ஜென்சி பாடிய அனைத்துத் தமிழ் பாடல்களும் ஒரு தொகுப்பாக..

(நன்றி: ப்ரசன்னா)

கிடைத்தப் பாடல்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.. சொடுக்கிக் கேட்டு மகிழுங்கள்..

மயிலே..மயிலே.. (கடவுள் அமைத்த மேடை )

மீன்கொடித் தேரில்..(கரும்புவில்)

என் வானிலே.. ஒரே வெண்ணிலா...(ஜானி)

ஒரு இனிய மனது... (ஜானி)

ஆயிரம் மலர்களே.. மலருங்கள்.. (நிறம் மாறாத பூக்கள்)

இரு பறவைகள் மலை முழுவதும்.. ,
இதயம்... போகுதே..,
தம்தன..தம்தன.. தாளம் வரும்.. (புதிய வார்ப்புகள்)

காதல் ஓவியம்... (அலைகள் ஓய்வதில்லை)

தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாசப் பறவைகள்)

அடிப் பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..(முள்ளும் மலரும்)

கல்யாணம் என்னை முடிக்க.. (மெட்டி)

தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்)

வாடா என் ராஜாக்கண்ணா.. (ரிஷிமூலம்)

ஆத்தோர காத்தாட.. (எங்கேயோ கேட்ட குரல்)

உனக்கென தானே... (பொண்ணு ஊருக்குப் புதுசு)

கீதா..சங்கீதா... (அன்பே சங்கீதா)

தேவன் திருச்சபை மலர்களே (அவர் எனக்கே சொந்தம்)

பனியும் நீயே..மலரும் நானே.. (பனிமலர்)

ஞான் ஞான் ஆடணும்.. (மலையாளம்) (பூந்தளிர்)

பூ மலர்ந்திட.. (டிக் டிக் டிக்)

வாடி என் கப்பக் கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)

ஆடச் சொன்னாரே (வட்டத்துக்குள் சதுரம்)

வானத்துப்பூங்கிளி.. (திரிபுர சுந்தரி)

தோட்டம் கொண்ட ராசவே (பகலில் ஓர் இரவு)

அக்கா..ஒரு ராஜாத்தி (முகத்தில் முகம் பார்க்கலாம்)

நான் உன்னைத் திரும்ப திரும்ப.. (எல்லாம் உன் கைராசி)

காத்தாடுது ஆசை கூத்தாடுது (கரடி)

என் கானம் இன்று அரங்கேறும் (ஈர விழிக் கனவுகள்)

மணியோசைக் கேட்டதா.. (இருளும் ஒளியும்)

Monday, August 18, 2008

பறிக்கக் காத்திருக்கும் பப்பாளிகள்..

[நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி: நம்மப் பப்பாளி பத்தோடு பதிணொண்னா தேர்வயிடுச்சுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... நாட்டாமைகளுக்கு ஒரு பெரிய 'கும்பிடறேஞ்சாமியோவ்!!']


ரசிகர்களின் ஏகோபித்தப் பாராட்டுக்களால் இந்தப் பப்பாளிப் படத்தையே இந்த மாத PIT போட்டிக்கு அனுப்பியுருக்கேன்.



நம்மப் படத்தப் பத்தி நாட்டாமைகளெல்லாம் என்னச் சொல்லப் போறாங்கன்னுத் தெரியல..

இருந்தாலும் அவங்க சொல்லிக்கொடுத்த மூணு முக்கியமான விஷயங்கள் எந்தளவுக்கு இந்தப் படத்துல வந்திருக்குன்னு நானே ஆராய்ஞ்சுப்(?) பாத்ததுல நம்ம சிற்றறிவுக்கு எட்டியது..

1) Rule of thirds..
இதுல நம்மப் படம் பெயிலுன்னுதான் தோணுது. பப்பாளி நட்டநடுவால இருக்கறதால.. கோடுகள் சந்திக்கும் இடத்துல முக்கியமான பொருள் பப்பாளி இல்லை.. இருந்தாலும் சிலப் படங்கள் நல்லா வரணும்னா சில சட்டங்களை மீறுனாலும் பரவாயில்லன்னு நாட்டாமைகளே சொல்லியிருக்கறதால மன்னிச்சுருவாங்கன்னு நம்பறேன்.

2) Composition
இதுல நம்மப் படம் தப்பிச்சிரும்னு நம்பிக்கை இருக்கு.. இன்னும் கொஞ்சம் பக்கத்துல போனா இலைகளெல்லாம் தெரியல.. தூரமா வந்தா பக்கத்திலிருக்கும் மரங்களின் இலைகள் தெரிந்தது அப்புறம் பப்பாளியும் தெளிவாத் தெரியல.. ஆனா இந்த composition-ல ஒரு symmetric persception கெடச்சிருக்குன்னு தோணுது. அப்புறம் இலைகளெல்லாம் இயற்கையாகவே ஒரு shade தந்திருக்கு..

3) Leading lines
இங்கதான் நம்மப் பப்பாளி கலக்கிருச்சு.. மரத்தண்டு நம்மப் பார்வையை அப்படியே மேலத் தொங்கற ரெண்டு பப்பாளிக்கும் கொண்டு சேக்குது.. பெரியப் பெரிய மரங்களை அண்ணாந்து பாக்கும் போது இந்த leading lines concept தான் ஒரு பிரமிப்பைத் தருதுன்னு நெனைக்கிறேன்.

சரி.. நம்மப் படத்தப் பத்தி நாமே சுயத்தம்பட்டம் அடிச்சுக்கக் கூடாதுன்னாலும்.. போட்டியிலிருக்கற மத்த படங்கள பாக்கும்போது முடிவு அறிவிக்கறதுக்குள்ளார ஆடிச்சாத்தான் ஆச்சு.. அதனால தயவுபண்ணி பொருத்துக்குங்க..

வந்ததே வந்தீங்க.. இன்னும் கொஞ்சம் பப்பாளிப் பழங்களை ஆசை தீரப் பாத்துட்டுப் போங்க...

அதே பப்பாளிகள்.. இன்னும் பக்கத்துல..


ஒரே ஒரு பழுத்துச் சிவந்தப் பப்பாளி.. இத அப்பவே பறிச்சுச் சாப்ட்டாச்சுங்கோவ்..


...................??!!


(அப்பாவி ஆறுமுகம்: தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்..? ஒண்ணுமே புரியல..!)

Friday, August 15, 2008

நிஜ சூப்பர் ஸ்டார்!!!

இந்த வார விகடன் ஒரு 'நிஜ' சூப்பர் ஸ்டார் பற்றியக் கட்டுரை வெளியுட்டள்ளது...
இதுவரை படிக்காதவர்கள், கண்டிப்பாகப் படிக்கவும்.

இளங்கோ போன்ற இந்த நிஜ சூப்பர் ஸ்டார்களால்தான் தமிழனின் வாழ்வு இன்னும் உயரப்போகிறது. இவரை போன்றோர்களால் தான் 2020 யில் இந்தியா வல்லரசாகும் கனவு, நிஜமாகப் போகிறது.

இவரைப் போன்றோரின் சாதனையை உலகுக்கு அறிவிக்கும் விகடனுக்கு நன்றிகள் பல...



அந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்...

-----------------------------
....குத்தம்பாக்கம் கிராமம்!

இன்று பாசமும் ஈரமுமாகப் பசுமை பேசும் அந்த மண்ணில், மற்றவர்கள் கால் வைக்கவே பயந்து நடுங்கிய காலம் ஒன்று உண்டு. பெயரிலேயே குற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்த கிராமத்துக்கு அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி ஸ்தலம். கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால், இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது!

எப்படி நடந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்..? கேள்விக்கு விடையாய், வெளிச்சமாய் வந்து என் கை குலுக்குகிறார் இளங்கோ. குத்தம்பாக்கம் பஞ்சாயத்து அகாடமி தலைவரான இளங்கோவை இன்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் 'வந்துட்டுப் போங்களேன் சார்' எனப் பேச அழைக்கின்றன.
------------


'குற்றங்களும் தவறுகளும் எங்கே சார் உருவாகுது... வேலையில்லாததும் வறுமையும்தானே முதல் காரணம். நோய் என்னன்னு தெரியாம, மருந்துக்கு அலைஞ்சா எப்படிச் சரியாகும்? அதைக் கண்டுபிடிச்சு சரி பண்ணினதுதான் மாற்றத்துக்கான முதல் விதை. குடிசைகள்தான் கூடாது. கிராமங்களுக்கு குடிசைத் தொழில்கள் அவசியம் வேணும். அதை உருவாக்கி இந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தந்தோம். எங்க ஊர்ல விளையுற நெல்லை அரைக்க, நாங்களே ரைஸ் மில் ஆரம்பிச்சோம். துவரம்பருப்பை பாலிஷ் போடும் தொழிற்சாலையிலிருந்து வீடு கட்டப் பயன்படுத்தும் கட்டடப் பொருட்கள் வரை அத்தனையையும் நாங்களே தயாரிக்கிறோம். ஊர்ல காய்க்கிற தேங்காய்களில் இருந்து மொத்தமா எண்ணெய் எடுக்கிறோம். எண்ணெயில் இருந்து சோப்பு தயாரிக்கிறோம். மண்ணெணெய் ஸ்டவ்விலிருந்து தெரு விளக்குகளைப் பொருத்தத் தேவையான அலுமினியக் கூடுகள் வரை செஞ்சு வெளியூர்களுக்கு சப்ளை பண்றோம்.
----------

இளங்கோ இன்ஜினீயரிங் முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தவர். 'சார், இது என் சொந்த ஊர். என்னை வளர்த்த மண். கெமிக்கல் இன்ஜினீயரா நான் நல்லா இருக்கேன். ஆனா, என் ஊர் அப்படியே இருக்குதேன்னு வருத்தப்பட்ட நான், வேலையை வீசிட்டு ஊருக்கே வந்தேன். சாராயமும் சாதிச் சண்டையுமா கிடந்த கிராமத்தில் என்னால் முதலில் எதுவும் பண்ண முடியலை. அதிகாரம் கையில் இருந்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்னு தோணுச்சு. தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்துத் தலைவர் ஆனேன். ஆரம்பத்தில் என்னை எதிர்த்தவங்ககூட என் நல்ல நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஊர் நன்மைதான் முக்கியம்னு ஒவ்வொரு வங்கியா ஏறி இறங்கினேன். அரசாங்கத்தின் ஒவ்வொரு கதவையும் ஓயாமத் தட்டினேன். அரசிலும் வங்கிகளிலும் என்னவெல்லாம் திட்டங்கள் இருக்கோ, அத்தனையையும் குத்தம்பாக்கத்துக்குக் கொண்டுவந்தேன். நினைச்சது நான்... ஆனா, ஊரே ஒண்ணு கூடி நடத்திக்காட்டினாங்க. இன்னிக்கு, சுத்துவட்டாரமே மரியாதையா, முன்னோடியாப் பார்க்கிற அளவுக்கு குத்தம்பாக்கத்தைச் சுத்தம்பாக்கம் ஆக்கிட்டோம்!'' என்கிறார் இளங்கோ நெகிழ்ச்சியாக!
---------------

Thursday, August 14, 2008

TR - The Terror!!!!!!!

இதுவரைக்கும் பாக்கலைன்னா, கண்டிப்பா பாருங்க மக்களே...
ரொம்ப பயமாயிர்ந்துச்சுன்னா பின்னாடி கைத் தட்டுற ஆளப் பாத்துக்கோங்க..

வீடியோ கீழேத் தெரியலைன்னா, இங்க சொடுக்குங்க..

Wednesday, August 13, 2008

பப்பாளி... (பிட்டு படம்)

ஒரு வருடத்தைக் கடந்து என்னைப் போன்ற பல புகைப்பட ஆர்வலர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் 'தமிழில் புகைப்படக்கலை' குழுவினர்க்கு முதலில் மனமார்ந்த நன்றி...

இவ்வளவு நாளாக மாதாமாதம் ஒரு தலைப்பைக் கொடுத்ததால், போட்டிக்கான புகைப்படம் தெரிவு செய்வது, கடிவாளம் போட்ட குதிரை சவாரி போல், சிறிது வசதியாக இருந்தது. இந்த மாதம் கடிவாளத்தை நீக்கியதும், ஒண்ணுமே புடிபடலை.

இப்பக் கொஞ்ச நாளாத்தான் கேமராவத் தூக்கிட்டு படம் காமிச்சிட்டு இருக்கறதால எடுக்கிற எல்லாப் படமும் அருமையாதான் தெரிகிறது. இதுல எத போட்டிக்கு குடுக்கிறதுன்னு ஒண்ணும் புரியல. அங்கேயும் இங்கேயும் சிலரிடம் கேட்டும், flickr - ல வந்த ஒண்ணு ரெண்டு பின்னூட்டங்கள வெச்சும், இந்த 5 படங்கள தெரிவு செஞ்சுருக்கேன்.

ஐந்தாவது:

இந்தத் தடவ ஊருக்குப் போன போது என் மருமகப்பொண்ணு அஷ்விகா தண்ணில விளையாடிட்டிருக்கும் போது எடுத்தது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா நல்லா வந்திருக்கும்.




நாலாவது:

பாப்பாளி மரத்த ஏதேச்சயா அண்ணாந்து பாத்தப்ப தெரிஞ்ச அழகு.. அத அப்படியே படம் புடிச்சுப் பாத்தா இன்னும் அழகா இருந்துச்சு. மரங்கள அண்ணாந்து பாத்தா பெரும்பாலும் பிரமிப்பாவும், அழகாகவும் இருக்கும். இன்னும் அந்தப் பிரமிப்பை புகைப்படத்தில் கொண்டுவர முடியவில்லை. குறைந்தபட்சமா இதில் அந்த அழகையாவது கொண்டுவந்திருக்கிறதா நம்பறேன்.

(ரசிகர்களின் ஏகோபத்திய ஆதரவைத் தொடர்ந்து, இந்தப் பப்பாளியும் போட்டியில் கலந்துகொள்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.... )(கரவொலியோசை விண்ணைப் பிளக்கிறது!!!)



மூணாவது:

நூறு வயச கடந்த தாத்தாவும், தொண்ணூறு வயசக் கடந்த பாட்டியும்... இன்னும் அதே காதலுடன் யாருடைய உதவியும் இல்லாம தனியா வாழ்ந்திட்டு இருக்காங்க. என்னுடய தூரத்துச் சொந்தம். இவர்களிடம் பேசிய அந்த சில மணி நேரங்களில் கற்றுக் கொண்டது : Priceless!



இரண்டாவது:

குழந்தைகளுடன் விளையாடுவதும், அவர்கள் விளையாடுவதை ரசிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் முக்கியமான ஒன்று. உடலும், வயதும் எப்பவுமே குழந்தையாகவே இருக்க ஒத்துழைக்காத போதும், மனதளவில் இருக்க இது மிகவும் உதவுகிறது. கடைசிவரை இப்படத்தையே போட்டிக்கு அனுப்ப நினைத்திருந்தேன்.



முதல் (போட்டிக்கு):

அந்திமாலை.... ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்காக திரையிடும் சொர்க்கத்தின் முன்னோட்டம் (Heaven's trailer). என்னுடைய முதல் HDR முயற்சி.
இதுவரை ஒரு 200 படங்களுக்கு மேல் அந்தி சாய்வதை எடுத்துள்ளேன். அதில் எல்லாமே எனக்குப் பிடித்தவை. அதில் இதுவும் ஒன்று.

Friday, August 8, 2008

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்.

என்னுடைய 'அதிக விவரம்' இல்லாத 6-7 வகுப்பு வரையிலான வயதில், என் வயதொத்த மற்றப் பசங்களைப் போல நானும் மிகத் தீவிர ரஜினி ரசிகன். அவரது ஸ்டைலிலும், ஆக்‌ஷனிலும் மெய் சிலிர்த்தவர்களில் நானும் ஒருவன். 'மிஸ்டர் பாரத்' படம் வந்த சமயத்தில் தியேட்டர்ல ரஜினிக்குச் சரிசமமாக சத்யராஜின் ரசிக மன்றங்களின் தோரணங்களைக் கண்டு கோபமடைந்திருக்கிறேன். இவ்வளவு கெட்டவனுக்குப் போய் இப்படியெல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்களே..' என்று வருத்தமும் அடைந்ததுண்டு. 'நம்ம ரஜினி உடற ஒரே உதைல சத்யராஜ்லாம் தூள் தூள்றா' -ன்னு நண்பர்களுடன் வீர வசனம் பேசியதுண்டு. படிக்காதவன் படத்துல வர “ஊரத் தெரிஞ்சுக்கிட்டென், உலகம் புரிஞ்சுகிட்டேன் என் கண்மணி” -ன்ற பாட்ட 'தலைவரோட' ஸ்டைலிலேயே தண்ணி அடிச்சுட்டு ஆடர மாதிரி பாடி அப்பாக்கிட்டத் திட்டு வாங்கியதும் உண்டு.

விவரம் தெரியத் தெரிய, சினிமாவிற்கும் நிஜத்திற்கும் வேறுபாடுகள் புரிய ஆரம்பித்தவுடன் நடிகர்கள் வெறும் நடிகர்களாகவேத் தோன்றினார்கள். மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ், பாசில் (எத்தன ‘பா'!!!!) போன்ற இயக்குனர்கள் உண்மையான திறமையாளர்களாகத் தோன்றினார்கள். 'ரஜினி ரசிகனாக' இருந்தபோது அவ்வளவாய் பிடிக்காததிருந்த ‘ஆறிலிருந்து அறுபது வரை', ‘எங்கேயோ கேட்ட குரல்', ‘புதுக்கவிதை', ‘முள்ளும் மலரும்' போன்றப் படங்கள் பிடிக்க ஆரம்பித்தது. சரியா சொல்லனும்னா ‘புரிய' ஆரம்பித்து. என்னைப்பொருத்தவரை அந்தப் படங்களில் ரஜினியேற்ற பாத்திரங்களில் வேறு யாரலும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
குறிப்பாக தங்கச்சியின் மேல் முரட்டுத்தனமான பாசம் கொண்ட அண்ணனாக ரஜினி வந்த ‘முள்ளும் மலரும்' ஒரு காவியம் என்றால் மிகையாகாது.

அப்புறம் எங்கேயோ தவறு நடந்து ரஜினி ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டாரோ என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் அந்த வட்டத்திலேயே இவ்வளவு ரசிகர்களும் சிக்கிக்கொண்டார்கள் என்பது என்னைப் போன்ற யதார்த்த திரைப்பட ரசிகர்களுக்கு வேதனையானச் செய்தி.

ஆனால் அந்த வட்டத்தில் உள்ள ரசிகர்களின் வாதமும் தவறானதில்லை. தினம் தினம் வாழ்க்கையில் போரடிக்கொண்டிருக்கும் வேலையில், திரைப்படம் தான் சராசரி ரசிகனுக்கு ஒரே பொழுதுபோக்கு. அந்த 2 1/2 மணி நேரமாவது 'புத்திக்கும்', மனதிற்கும் ஓய்வு கொடுத்து, நன்றாக சிரித்து விட்டு, தன்னுடைய கவலைகள் எல்லாவற்றயும், ரஜினி படங்களில் செய்வது போல் 'சுத்தி சுத்தி' உதைத்துவிட்டு மன நிறைவுடன் தியேட்டரை விட்டு வெளியே வருகிறான்.

தனது வாழ்க்கையில் நடப்பதையே திரையிலும் காண்பதில் விருப்பம் இல்லாததில் எந்தத் தவறுமில்லை. தவறு எங்கேயென்றால், திரையரங்குக்குள் புத்தியை இழக்கும் ரசிகன், வெளியிலும் இழந்துவிடுகிறான் என்பதில்தான். கட் அவுட் வைப்பதும், ‘பாலபிஷேகம்' செய்வதும், முதல் நாள் படம் பார்க்க முடியாமல் போனால் ரயில்ப் பாலத்தில் விழுந்து சாவதும், அவர்கள் முட்டாளாகிவிட்டார்கள் என்பதுக்கான சாட்சிகள். அவரை வழி நடத்தும் பொறுப்பிலிருக்கும் அவர்களது தலைவனும் ரசிகர்களின் இந்த முட்டாள்த்தன செய்கைகளினால் பணம் சம்பாரிப்பது எளிதாகிவிட்டதால் அதையே ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டார்கள். மேலும் கொடுமை என்னவென்றால், இந்தத் தலைவனைப் பார்த்து, புற்றீசல் போல பல ‘லிட்டில்', ‘இளைய' தலைவர்களும் உருவாகிக்கொண்டிருப்பதுதான்.



இந்த ரசிகர்களை இப்படியே வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கில் ரஜினியை வைத்து இயக்கும் இயக்குனர்கள் அவரது பாத்திரங்களை முட்டாளாக்கினார்கள். அவரை பொம்பளைகளிடம் சவாலிடும் ‘வீரனாக' சித்தரித்து, ‘பொம்பளைனா அப்படியிருக்கனும், இப்படியிருக்கனும்' -னு வசனங்களையும், கேனத்தனமான ‘பஞ்ச் டயலாக்குகளை' கொடுத்தும் 'விசிலடிச்சான்' ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்கள்.

ரஜினி என்னைப் பொருத்தவரை மிக நல்லவர். ஆனால் நமது சமுதாயத்தில் நல்லவனுக்கும் முட்டாளுக்கும் இருக்கும் இடைவெளி மிகக்குறைவு. என்னைப் பொருத்தவரை ரஜினியை சுற்றியிருப்பவர்கள் அவரின் நல்ல குணத்தைப் பயன்படுத்தி வடிகட்டிய முட்டாளாக்கி விட்டார்கள். ஒருமுறை தலைமுழுதும் மொட்டையாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அமெரிக்காவில் ஒரு சலூனில் முடி வெட்டும்போது தூங்கிவிட்டதால் தன்னை மொட்டையடித்து விட்டதாக அவரேச் சொன்னார். அதுதான் அவரது திரைப்பட வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.



தனிமனித போற்றுதலும், காவடி தூக்குவதும், தலைவனாக்குவதும் நம்ம ரத்தத்திலேயே ஊரியது. யாரலும் மாற்ற முடியாது. தாள முடியாத பிரச்சினைகளிலும், தீர்க்க முடியாத துக்கங்களிலும் நாள்தோரும் அல்லல் படும் சராசரி ரசிகன் ஒரு 'சூப்பர் பவரால்' தன்னைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தால் தான் என்னவோ இந்த மாதிரி சூப்பர் ஸ்டார்களால் தலைவனாக முடிகிறது.

ஒரு இனத்தை, மொழியைக் காக்க வேண்டுமெனில், உலகம் போற்றும், காலத்தால் அழியாத படைப்புகள் அந்த மொழியிலிருந்து வந்து கொண்டேயிருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இன்னோரு திருக்குறளோ, பாரதியோ வந்து உலக கவனத்தை ஈர்க்க முடியாது. ஆனால் இரானியம், வங்காள படங்களைப் போல் தமிழிலும் உலக கவனத்தை ஈர்க்கும் படங்கள் வந்தால், தமிழ் மொழியின் புகழ் பரவவும், தமிழ்ப் பேசுவதை நமது அடுத்தத் தலைமுறை தலைகுனிவாக கருதுவதையும் ஒரளவேனும் தடுக்கலாம்.

காதல், பருத்திவீரன், கல்லூரி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் வந்து ரசிகர்களின் ரசனையை கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்திக் கொண்டிருக்கும் போது, 'சிவாஜி', ‘குசேலன்', ‘குருவி' போன்ற படங்கள் ஒரு சாபக்கேடு.

தற்போது நிறைய பதிவர்களும், ஞானி போன்ற எழுத்தாளர்களும், ரஜினியைப் பற்றி எழுதுவதே, ரஜினி தனது புகழை பயன்படுத்தி, கொஞ்சமாவது தனது ரசிகனின் ரசனையை உயர்த்தமாட்டரா என்ற அங்கலாப்பில்தான். ரஜினி நினைத்தால் கண்டிப்பாக இது முடியும். மாறிக்கொண்டிருக்கும் ரசிகர்களின் ரசனைய சரியாக பயன்படுத்த ஒரு அருமையான வாய்ப்பு இந்த குசேலன் படம். “கத பரையும் போல்” படத்தை அப்படியே சீனிவாசனை இயக்கச் சொல்லி, முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்பி, எந்த விளம்பரமும் இல்லாமல் தானே தயாரித்து வெளியிட்டிருக்கலாம். யதார்த்தமாக படம் பார்க்கச் செல்லும் ரசிகன், படத்தில் ரஜினியின் எதிர்பாராத தோற்றமே வெகு விளம்பரமாகியிருக்கும். அப்படி இந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால் ரஜினி உண்மையாகவே சூப்பர் ஸ்டார்.

Tuesday, August 5, 2008

'விர்த்தி கெட்ட தமிழனுக்கு சூல்'

சில ஆண்டுகள் முன்பு, மலையாள சேனல் ஒன்றில் நகைச்சுவைத் தொடர் ஒன்று. மலையாளத்தில் 'சூல்' எனில் விளக்குமாறு என்று பொருள். வரிசையாகப் பாடிக்கொண்டு வந்தார்கள், யார் யாரை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும் என்று. அதில் ஒரு வரி, 'விர்த்தி கெட்ட தமிழனுக்கு சூல்' என்பது. 'விர்த்தி' எனில் சுத்தம் என்று பொருள்.
- நாஞ்சில் நாடன் ('தீதும் நன்றும்!' ஆனந்த விகடன் 30-07-08)

சென்னைப் போன முதல் நாள், விமான பயணத்தில் தூக்கம் கெட்டுப் போனதால் விடியல் காலையில் எழுந்து பீச் போலமென்று சென்றேன். போன பின் தான் அது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்தது.

எங்கு பார்த்தாலும் குப்பை.. ப்ளாஸ்டிக் கவர்கள்...

நிறைய படங்களில் பார்த்த அந்த 'Karl Schmidt Memorial' கட்டிடம் பரிதாபமாக இருந்தது.

Sad state of Karl Schmidt Memorial

இந்த குப்பைகளுக்கும் கண்றாவிகளுக்கு மத்தியிலும் நிறைய பேர் வாக்கிங் போவதும், யோகா செய்வதுமாக இருந்தது ஆச்சர்யம்.

Pranayama..?

பீச்சின் இரண்டு பக்கமும், சுமார் ஒரு பத்து, பதினைந்து தடியன்கள் வரிசையாக கடலைப் பாத்துட்டு உட்கார்ந்திருந்தார்கள். என்னடா செய்ராங்கன்னு பாத்தா... அடக்கண்றாவி.. எல்லாம் 'போய்'ட்டிருந்தானுங்க.. அடப்பாவிகளா.. ஒரு ஓரமாவது போகக்கூடாது... நட்ட நடுவுல...

Yoga..?

இந்தப் படத்துல யோகா (?) பண்ணிட்ருக்கற ஆளுக்குப் பின்னாடி பாத்திங்கன்னா புரியும்..

தினமல(ம்)ர்ல இந்த மாதிரி காதலர்கள அடிக்கடி படம் பிடிச்சு, எதோ இவங்களாலதான் நம்ம ‘கலாச்சாரம்' கெடர மாதிரி போடரானே, இந்த மாதிரி கண்றாவிகளையும் போட்டாத்தான் என்ன?


விகடனில் நாஞ்சில் நாடன் சொன்னது எவ்வளவு உண்மை!

இதுவா நம் தமிழ் கலாச்சாரம்?

Sunday, June 29, 2008

எங்க ஊர்த் திருவிழா...

எங்க ஊர்ல (Sandiego Fair) இப்ப திருவிழா.. சரி.. சரி.. நான் இப்ப இருக்கற இந்த ஊர்ல திருவிழா... அப்ப எடுத்தப் படங்கள்ல சில உங்க பார்வைக்கு..
(எல்லாப் படங்களையும் தடையில்லாமல் பார்க்க.. இங்கே க்ளிக்குங்க


குழந்தைகளுக்கு குதுகூலம்..
All the rides in action


கலர் கலரான பொம்மைகள்..
All the rides in action


வியக்க வைக்கும் ராட்டினம்..
All the rides in action

மற்றும் விதவிதமான ராட்டினங்கள் விடியும் வரை..
All the rides in action

எல்லாம் இருக்கு.. இருந்தாலும் காவடி தூக்கி, தீர்த்தம் எடுத்து, கெடா வெட்டி, பறையடிச்சு, சாமியாடி கொண்டாடும் நம்மூர் கோயில் திருவிழால கிடைக்கிற மகிழ்ச்சி இங்க கிடைக்காதுங்க..!!

Friday, June 27, 2008

அட்றாட்றா நாக்க முக்க..!


விகடனில் வந்த இந்தக் கட்டுரையைப் படித்த பின் தான் “காதலில் விழுந்தேன்” என்ற, இன்னும் வெளிவராத படத்தின், இந்தப்பாடலைக் கேட்டேன்.
சும்மா சொல்லக்கூடாதுங்க, சும்மா பின்னி பெடலெடுத்துட்டாங்க.. பாட்டைக் கேக்கும்போது, சும்மா வேட்டியத் தூக்கிக்கட்டி, நாக்க நல்லா மடிச்சு உள்ள தள்ளி, கும்முன்னு ஒரு குத்தாட்டம் போடனும்னு தோனுதுங்க.. இன்னிக்கு முழுசும் மண்டைக்குள்ள ஒரே ” நாக்க முக்க.. நாக்க முக்க..” தான்னா பாத்துக்கோங்களேன்..


நன்றி: விகடன்

படத்துல 2 விதத்துல இந்த பாட்டு இருக்குங்க.. இன்னும் நீங்க கேக்கலைனா இதோ..

1) ஆண் குரலில், கொஞ்சம் western இசை கலந்து:

Get Your Own Songs Player at Music Plugin

2) சின்னப் பொண்ணு என்ற ‘பொண்ணு' பாடியது, அசல் கிராமியப் பாடல்:

Get Your Own Songs Player at Music Plugin

கொசுறு (எச்சரிக்கை) செய்தி:

இதே படத்துல ”உனக்கென நான்” அப்படினு இன்னொரு பாட்டு.. அப்படியே ரியானா (Rihana) வோட Unfaithful - ன்ற அருமையானப் பாட்ட குத்திக் கொதறி, கொடல உரிச்சு தொங்கப் போட்டிருக்காங்க. ரியானா-வ எனக்கு மாதிரியே உங்களுக்கும் பிடிக்கும்னா தயவுப்பண்ணி இந்தப் பாட்ட கேட்றாதீங்க.

Thursday, June 26, 2008

கல்லூரி மாணவிகளின் உடைக் கட்டுப்பாடு!!

இன்றைய (06/27) தினமலரின் முதல் பக்கத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படம்:



எனக்குத் தோன்றிய இரண்டு கேள்விகள்:

1) இந்த உடைகளில் எந்தவிதமான குறைகளும் எனக்குத் தெரியவில்லை. (பிகர்ஸ்-லாம் கொஞ்சம் எடையதிகம்(!) என்பதைத்தவிர) உங்களுக்கு?
2) இவர்களின் அனுமதி பெற்றா இப்படங்களை வெளியிடுகிறார்கள்? இப்படங்களால் இப்பெண்களுக்கு எதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தினமலர் பொறுப்பேற்குமா?

தரையிறங்காமல் சென்ற விமானம்.. காரணம்: விமானி தூங்கிவிட்டார்...

டைம்ஸ் ஆப் இந்தியா
செய்தி

அடுத்த தடவை ஏரோப்ளேன்ல பறக்கும் போது விமானி முழிச்சிருக்கறாரான்னு ஒருதடவை பாத்துக்கோங்க மக்களே...

Saturday, June 21, 2008

பீச் ஓரமா அந்தப்பக்கம்...

ரொம்ப நாளா P & S camera வெச்சுட்டே என்னோட புகைப்படக்கலை ஆர்வத்திற்கு தீனி போட்டுட்டிருந்தேன். இப்பதான் கடைசியா ஒரு SLR வாங்கினேன். Nikon D40: உள்ளதிலேயே விலைக் குறைவான, எடைக்குறைவானதுன்னு சொன்னாங்க.. இதுவர ரொம்ப நல்லாருக்கு..
அதோட 18-55mm லென்சும், 55-200mm லென்சும் (மிகவும் பயனுடயது) கொடுத்தாங்க.

முதலில் வீட்டுகுள்ளாரயும், வீட்டுத்தோட்டத்திலும் அப்படியும் இப்படியும் பிடிச்சதுல 2 படம்..







அப்புறம் போன வாரக்கடைசியில் கடற்கரைக்குச் போயி கால் வலிக்க நடந்து.. கை வலிக்க க்ளிக்கியதுல நல்லாருக்குன்னு நான் நினச்சுதுல்ல ஒரு சிலத.. உங்க பார்வைக்கு...

பிடிச்சிருந்தா.. ஒரு ரெண்டு நல்ல வார்த்த சொல்லீட்டுப்போனீங்கனா சந்தோசமா இருக்குங்க..

பெரிய மனுசங்கெல்லாம் எதாவது குற்றங்கொற இருந்துச்சுன்னா அத சொல்லீட்டுப் போங்க..
நானும் கத்துக்கறங்க..

மகாராசாப் பறவை..
இதுக்கு நான் வெச்சப் பேரு..மகாராசாப் பறவை.. அதென்னமோ இது பறந்து வர தோரணயப் பாத்தா அப்படியே மகாராசா படை பரிவாரங்களோட வலம் வர மாதிரிதான் இருக்கும்..



தைரியசாலி அணில்..
நம்மூர்ல அணில் நம்ம பத்தடிக்கு அந்தப் பக்கம் வந்தாலே பாஞ்சு ஓடிப்போயிரும்.. இங்க நான் பக்கதுலபோயி படம் புடிச்சும் அசராம போஸ் கொடுத்திட்டு இருந்துச்சு..



மணக்கோட்டைஎங்காத்தா அடிக்கடி சொல்லுங்க.. 'வெறும் மனக்கோட்ட கட்டாத.. கட்டாத..' ன்னு.. இங்க குட்டிப்பசங்க மண(ல்)க்கோட்டை கட்டி வெச்சுருக்காங்க.. இதுக்கு என்ன சொல்லுமோ எங்காத்தா..



எங்கூரு அய்யனாரு..
நம்மூர்ல இப்படியொரு பாறை இருந்துச்சுனா கண்டிப்பா அய்யனார் சாமியாக்கி வேல் கம்பெல்லாம் குத்தி, சாமியாடி, கோழியடிச்சு கெடா வெட்டி நோம்பி கொண்டாடியிருப்போம்ல..



குட்டிச் (மணல்) சாமியார்
இந்தப் பொடியன் நம்மூர்ல இல்லாம போய்ட்டாங்க...



50 பைசாப் படம்
நம்ம பங்காளியொருத்தன் நான் இப்படி புல்லயும் பூட்டயும் படம் புடிக்கரதப் பாத்து ‘என்ன 50 பைசா படம் புடிக்க போறியா' -னு கேப்பான். இந்த மாதிரி post card படம் புடிக்கும் போதெல்லம் அதுதான் நெனப்புக்கு வரும்..



பூந்தளிராட..
சின்னப் பசங்க ரெண்டு அழகா சோடி போட்டு சுத்தீட்டிருந்துச்சுங்க.. பன்னீர் புஷ்பங்கள் சோடிக் கணக்கா.. அந்த வயசுல இதெல்லாம் எவ்வளவு சுகம். இல்லீங்களா..?



ஆடியடங்கும் வாழ்க்கை..
இந்த வயசுல நாமெல்லாம் இப்படி இருக்க கொடுத்து வெச்சுருகனுங்க.. இல்லீங்களா..?



எகிறிக்குதித்தேன்..வானம் இடித்தது..
இதுதாங்க.. எனக்கு ரொம்ப பிடிச்ச படம். உங்களுக்கு?




படமெல்லாம் பிடிச்சிருந்துச்சுங்களா?