Saturday, May 15, 2010

அங்காடித் தெரு - எண்ணங்கள்

ஓவ்வொரு முறையும் 'Children of Heaven' மாதிரிப் படங்களப் பாக்கும் போது, இந்த மாதிரி எத்தனை எத்தனையோக் கதைகள் நம்ம ஊர்லயும் இருக்கே.. யாருமே இந்த மாதிரி ஒரு படம் எடுக்க மாட்டேங்கறாங்களே அப்படின்னு ரொம்ப அங்கலாப்பா இருக்கும்..

எப்பவாது வர யதார்த்தப் படங்களப் பாத்தா.. நல்லக் கதை இருந்தாலும், ஒண்ணாத் திரைக்கதை ரொம்பக் கொடுமையா இருக்கும் இல்ல வன்முறை ரொம்ப அதிகமா இருக்கும், இல்லன்ன ஓவரா சோகமா (melodrama) இருக்கும்..

'போக்கிரி', பேக்கிரி', ‘வில்லு', ‘பில்லு.. பில்லா', 'பல்லி', 'குருவி', ‘சுறா', ‘திமிங்கலம்' ன்னு அந்த மாதிரிப் படங்களின் ரசிகர்களுக்கு மட்டும் திகட்ட திகட்ட படங்கள் வரிசயாப் பண்றாங்களே.. நமக்குன்னு சொல்லிக்கற மாதிரி படங்கள் வரவே மாட்டேங்குதேன்ற ஏக்கத்தப் போக்குற மாதிரி.. 'அங்காடித்தெரு'



எப்பவாவது வீசுற வசந்தம் மாதிரி... வசந்தபாலன் ‘அங்காடித் தெரு'-ங்கற இந்தப் படத்தக் குடுத்துருக்காரு..

இனி.. இந்தப் படத்த உருவாக்கின, நடித்தவங்கக்கிட்டயெல்லாம் நேரடியாப் பேச முடியாட்டிப் போனாலும் இவங்கள சந்திச்சா என்னப் பேசலாம்ன்னு தோன்ற எண்ணங்களைப் பதிவாய்...


ஐங்கரன்


மொதல்ல..இப்படியொரு படத்தத் தயாரிச்ச ஐங்கரனுக்குப் பெரிய நன்றி!!! இந்தப் பேட்டியில அருண்பாண்டியன் சொன்ன மாதிரி.. இனிமே இதே மாதிரி நல்லப் படங்களாக் கொடுத்தீங்கன்னா என்ன மாதிரி ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்..



வசந்தபாலன்:

கை கொடுங்க பாலன்... உங்களுடய இந்தப் பேட்டியிலேயே என்னுடையப் பலக் கேள்விகளுக்கு விடைக் கெடச்சிருச்சு.. இந்தப் படத்துக்காக எவ்வளவு மெனக் கெட்டிருகீங்கன்னுப் புரியுது.. உங்களுடய முயற்சிக்கும், அற்புதமான ரசனைக்கும் இனி எப்பவுமே இதே மாதிரி வெற்றி கிடைக்கும்.. இன்னும் இதே மாதிரிப் பல நல்லப் படங்களத் தந்தீங்கன்னா எங்கள மாதிரி ரசிகர்களுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்..

ஒரு சமூகம் நிலைத்திருக்கணும்னா நல்ல இலக்கியங்கள் ரொம்ப அவசியம்.. இப்பவெல்லாம் திரைப்படங்கள்தான், வேற வழியில்லாம, பெருபான்மையான மக்களுக்கு இலக்கியமா இருக்க வேண்டிய சூழ்நிலை.. நம்மத் தமிழ் மொழிய இன்னும் உலகம் முழுதும் எடுத்துச் சொல்லறதுக்கு திரைப்படங்கள் ஒரு எளிதான ஊடகம்.. ஆனத் திரைப்படங்கள இப்பெல்லாம் இலக்கியமா யாரும் படைக்கறதில்லை.. ஏன்னா அது எளிதானக் காரியமும் இல்ல..
நல்லாக் கதையெழுதறவங்களே இப்பப் படத்தயும் இயக்கி அவங்களே வசனமும் எழுதி (தொழிலில் போட்டி, யார் மேலயும் நம்பிக்கை வைக்க முடியாத சூழ்நிலை தான்னு நினைக்கிறேன்), கலைப்படமா வியாபாரப் படமான்ற குழப்பத்துல கொஞ்சம் சொதப்பலா நிறையப் படங்கள் வந்து தோத்துப் போயிடுது..
ஆனா நீங்க அதிலெல்லாம் ரொம்பக் கவனம் செழுத்தி அட்டகாசமாப் படைச்சிருக்கீங்க.. ஆனா ஒரே ஒரு சின்ன வருத்தம்.. எப்படியாவது இளையராசாக்கிட்ட இந்தப் படத்தக் கொடுத்துப் பிண்ணனி இசைப் பண்ணியிருந்தீங்கன்னா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்..

ஒரு சாதாரணமானவனை பெரியாளாக்கிக் காட்டணும்னு நீங்கப் போராடியதும்.. பாலச்சந்தர் மாதிரி நானும் பலப் பெரிய நடிகர்ளை அறிமுகப் படுத்தனும் என்ற உங்களோட எண்ணமும், அதுக்கு உங்களுடய முயற்சியும்.. எங்களுக்கெல்லாம் ஒரு படிப்பினை.. இவ்வளவு நல்ல எண்ணங்களையும் உழைப்பையும் கொண்ட உங்களுக்குக் கண்டிப்பா எல்லாம் வெற்றியாகத்தான் அமையும் என்பது உறுதி..




மகேஷ்:


உன்னை வசந்தபாலன் தேடிக் கண்டுபிடிச்ச இந்த காணொளிகளே ஒரு அட்டகாசமானக் கவிதை.. முதல்ல உன்ன வந்து கேக்கறப்ப.. ‘வீட்டுல வைவாக' -ன்னு நீங்க விலகிப் போறத உன் வாழ்க்கை முழுசும் நீயும் மறக்க மாட்டாய் நாங்களும் மறக்க மாட்டோம்.. உன்னோட அந்த யாதார்த்தமும் வெகுளித்தனமும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்குமோ.. ஆனால் இது - Priceless.. பாதுகாத்து வெக்க வேண்டியப் பொக்கிஷம்..
உன்னுடையச் சித்தப்பாவோட இந்தக்கோபம் இப்பத் தவறாத் தெரிந்தாலும் என்னைப் பொருத்தவரைக்கும் அவர் உன் மேல் வெச்சிருக்கற அபரிதமான அன்பின் வெளிப்பாடாதான் நான் நினைக்கிறேன்.. உன்னுடய தந்தையையும், தாயின் பரிசுத்தமான அன்பையும் பாத்தப்ப என்னையறியாம அழுதுட்டேன்.. இவங்களுக்காகவாவது நீ பல வெற்றிகளைப் பெறணும்.. பெரிய ஆளா வரணும்ன்னு கடவுளை வேண்டிக்கொள்கிறேன்..

கடைசியா... ஆனா முக்கியமா..


அஞ்சலி

என்னம்மா இப்படிப் பண்ணிட்ட.. ரெண்டு நாளா 'அஞ்சலி' கிறுக்குப் பிடிச்சுல்ல அலைய வெச்சுட்ட..
இந்தப் படத்துல உன்னுடைய ஒவ்வொரு முக அசைவும் கவிதை...
குறிப்பா.. லிங்கு ராணிக்கு லெட்டர் கொடுக்கரப்ப காட்டற அதிர்ச்சியும், அது அவனோட நண்பன் சார்ப கொடுக்கரதுன்னு தெரிஞ்சது ‘அதானப் பாத்தேன்' ,ங்கரதுக்குக் காட்டிய நடிப்பு..வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.. அசத்தல்ம்மா..

ஸ்ரீதேவி, நதியா, ரேவதி, சினேகா வரிசையில் நீயும் கண்டிப்பாக வரலாம்..
ஆனா அதுக்கு 'ஆயுதம் செய்வோம்' மாதிரி உன்னக் கேவலப் படுத்திக் காட்டற காட்ட்சியமைப்பு இருக்கற படத்துல எல்லாம் நடிக்காம இருக்கணும்.. கவர்ச்சியாக நடிக்கறதுக்கு உங்கிட்ட அழகில்லாமல் இல்லை.. ஆனா அப்படி நடித்தாலும் உன்னுடைய அழகைத் தரமிறக்காமல் (உதாரணம்: தெலுங்கு போக்கிரி - இலியானா) இருக்கற மாதிரி படங்களாத் தேர்வுசெஞ்சா நிலைத்திருக்கலாம்..

நல்லாத் தமிழிப் பேசற, அழகாகவும் (அழகுன்ற வார்த்தை பத்துல.. புதுசா தமிழ்ல ஏதாவது வார்த்தை கண்டுபிடிக்கணும்), நடிக்கவும் தெரியற ஒரு நடிகையப் பாத்ததுல ரொம்ப மகிழ்ச்சி!!!




படம் எப்பவே வந்திருந்தாலும்.. இங்க எங்கேயும் வெளியிடாததால பாக்க முடியல... எல்லோரும் நல்லப் படம்னு சொன்னதால விமர்சனம் எதுவும் படித்துக் கதையைத் தெரிஞ்சுக்கல.. இப்பதான் ஒருத்தளத்துல தரவிறக்கம் பண்ணக் கிடச்சுது.. பாத்ததிலிருந்து மனசுக்குல்ல இருக்கற திருப்தியும் சந்தோசமும்.. அப்பாடா..!! அடுத்த மாசம் ஊருக்கு வந்ததும் திரையரங்குப் போய் பாத்தே ஆகனும்..

நாளைக்கு என்றப் பையன், பொண்ணு, பேரம்பேத்திகளுக்கெல்லாம் நம்ம மக்களையும், கடந்து வந்தப் பாதையும் காட்டறதுக்குக்கான ஒரு சிலப் படங்ள்ல கண்டிப்ப ‘அங்காடித் தெரு'-வும் ஒண்ணு..

படங்கள்: நன்றி சென்னை365

Saturday, March 20, 2010

விளையும் பயிர் - அழகோ அழகு!!!

குழந்தைகளே அழகு.. இந்தக் குழந்தை.. பேரழகு.. குறிப்பா 0:45 -ல் மிக எளிதானக் கேள்வி என்பதற்கான முகபாவனை.. PRICELESS!!!!!
கொடுத்துவைத்த பெற்றோர்கள்.. இக்குழந்தை எதிர்காலத்தில் பல சாதனைகள் படைக்கும் என்பது இப்போதே தெரிகிறது..!!




Saturday, February 6, 2010

கல்லூரி வானில்.. Benny Lava.. மீண்டும் ஹாலாந்திலிருந்து..

நம்ம பிரபுதேவா கலக்கலா ஆடிய ‘கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ' ங்கற பாடல் youtube -ல் "benny lava" - வாக ‘மொழிப்பெயர்க்க'ப்பட்டு உலகெங்கும் கலக்கியது நம்ம எல்லோருக்கும் தெரியும்.. இதுவரைப் பாக்காதவங்க கீழிருக்கும் காணொளியப் பாருங்க..



இப்ப இதேப் பாடலை ஹாலந்து மாணவர்கள் காப்பியடிச்சு, பிரபு தேவாவையே அசர வெச்சுட்டாங்கப் பாருங்க...

Friday, April 17, 2009

உலக அழகி சூசன் பாய்ல் !!!

சென்ற வாரம் "Britain Got Talent" நிகழ்ச்சியில் எல்லோரயும் அசரவைத்தார் ”சூசன் பாயில்” என்ற 45 வயதானப் பாடகி. பார்ப்பதற்கு மிக ஏழ்மையாகவும், இப்படியெல்லாம் இருப்பதுதான் 'அழகு' என்று நாமெல்லாம் கருதுவதற்கு உண்டான எந்தத் தன்மையும் இல்லாமல்..'ஒரு சிறந்த பாடகியாக வேண்டும்' என்று சொன்னதுமே ஏளனச் சிரிப்புகள்.. கிண்டல் பார்வைகள்.. “Never been kissed”, திருமணமாகாத, ஒரு பூனைக்குட்டியுடன் வேலைவாய்ப்பு எதுவும் இல்லாமல் ஸ்காட்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில், கிருத்துவ ஆலயத்தில் பாடி பிழைப்போட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்...ஒரு வரி பாடியெதுமே அரங்கமே எழுந்து கைத்தட்டவைக்கும் அந்தப் பாடகியின் திறமை.. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது..!!!





ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடும் நம் எல்லோருக்கும் இந்தப் பெண்ணின் திறமை.. ஒரு சரியானப் பாடம்!!!

இதுவரைப் பார்க்கவில்லையென்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று..


அந்த நிகழ்ச்சியின் வீடியோவை இந்தத் தொடுப்பில் சென்று பார்க்கவும்..

Monday, March 16, 2009

கருப்பு/வெள்ளை : வாழ்க்கை?

இந்த மாத PIT போட்டிக்கான படங்களாக இந்தப் படங்களிலிருந்து..




இங்கு தொடங்கி...



இதுவரைத் தொடரும்..


வாழ்க்கை... ஒரு முடிவில்லா(?) பயணம்.





இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறேன்..

இதுவரை நல்ல பல கருத்துக்களைப் பலர் அளித்துள்ளனர்..

குறிப்பாக ப்ரியா, சூரியன் இல்லாமலிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றிருக்கிறார்..

அப்படி மாற்றிப்பார்த்ததில்..



உண்மையாகவே மிகவும் நன்றாக வந்தது. நானும் அவர் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
இதை முதலிலேயே பண்ணியிருக்கலாம்..

கைப்புள்ளையின் தத்துவம் மிக அருமை.. ஆனால் வாழ்க்கை ஒரு முடிவில்லா பயணமா? முடிவுல்ல பயணமா? எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கிறது இல்லையா?

இதே படம் வண்ணத்தில்...

Straight to sky..

அறுபதுக்கும் மேற்பட்டோர் சும்மா அசத்தியிருக்காங்க.. இதுல நம்மப் படம் எந்த எடத்துல இருக்குதுன்னு தெரியல.. எப்படியிருந்தாலும் இதுவரை வந்தப் பாராட்டுக்களே கொஞ்சம் ஊக்கமளிப்பதாக உள்ளது..

Sunday, February 22, 2009

”எல்லாப் புகழும் இறைவனுக்கே...”

”எல்லாப் புகழும் இறைவனுக்கே...” ஆஸ்கரில் ஒலித்தத் தமிழ் வார்த்தை..
ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!!!!

'Inside Man' என்ற படத்தின் title song-ஆக முதன் முதலில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் ‘தையத் தையா' கேட்டபோதே நம்மாள் கண்டிப்பாக ஒரு நாள் ஆஸ்கரில் வருவார் என்ற நம்பிக்கை இன்று உண்மையானது...

”Slumdog Millionare” என்னைப் பொருத்தவரையில் ஏ.ஆர்.ரகுமானின் சிறந்தப் படைப்பு என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.. அது என்னால் படத்தின் திரைக்கதையமைப்பினால், காட்சிகளோடு ஒன்றிப்போக முடியாததாலும், துண்டு துண்டான பின்னனி இசையினாலும் இருக்கலாம்.. இருந்தாலும் நம்மத் தமிழன் உலகத்தில் உயர்ந்த விருதினால் அங்கீகரிக்கப் படுவது ரொம்ப மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது..

இந்த விருதால் இப்போதைக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.. ‘சக்கரகட்டி, அ..ஆ, அழகியத் தமிழ் மகன், சிவாஜி' போன்ற குப்பைப் படத்துக்கெல்லாம் இசையமைக்க அவருக்கு நேரம் இருக்காது. அப்புறம் சில ஹாலிவுட் படங்களில் அவரது இசையைக் கேட்கலாம்..

Tuesday, December 30, 2008

கெராமத்து விளையாட்டுக்கள் - 2

நூத்தாங்குச்சி:

தேவையானவை: 10 சின்ன ஈக்குமாத்து குச்சிகள் (பாதாங்கை நீளம்), ஒரு பெரிய ஈக்குமாத்துக்குச்சி (சின்னத விட ஒரு மடங்கு நீளம்)
ஆட்கள்: 2 அல்லது மேல்

மொதல்ல சின்னக்குச்சியெல்லாம் ஒட்டுக்கா சேத்து புடிச்சுக்கிட்டு, பெரிய குச்சிய நடுவால சொருகொணும். அப்புறம் எல்லாத்தயும் கீழ போடனும். மொதல்ல தனியாக் கிடக்கற சின்னக் குச்சிய எடுத்துட்டு, அந்தக் குச்சிய வெச்சு எல்லாக் குச்சியயும் அலுங்காம எடுக்கணும். அலுங்கிருச்சுன்னா ஆட்டம் முடிச்சது. சின்னக் குச்சிகெல்லாம் 10 புள்ளிகள். பெரிய குச்சிக்கு 100 புள்ளிகள். அதிக புள்ளிகள் எடுக்கரவங்க ஜெயிச்சவங்க..


தாயக்கரம் (அ) தாயம்

தேவையானவை: 2 தாயக்கட்டைகள் (அது இல்லீனா, ஒரு பக்கம் ஒரசிய 6 புளியங்கொட்டைகள் ),கரம், காய்களாக கற்கள் (அ) கொட்டமுத்துகள் (அ)உடைந்த ஓடுகள்

ஆட்கள்: 2 அல்லது மேல். (2 ஜோடியாக் கூட ஆடலாம்)

இதுதான் எங்கூருல நான் அதிகம் வெளையாண்ட வெளையாட்டு. சாயந்தரம் பொழுது எறங்கின உடனே, நானு, மோளயன் (மோகன்ராஜ்), பூவான் (பூபதி), சின்னசாமி, தொரயான், மாரப்பன், ஆழி எல்லாஞ் சேந்து ரொம்ப நேரம் ஆடுவோம். அப்பெல்லாம் நான் தோத்துட்டா பயங்கர கோவம் வந்து எல்லாரயும் அடிச்சுட்டு அழுவ ஆரம்பிச்சிடுவேன்..

பொதுவாத் தாயக்கட்டக மரத்திலேயோ, இரும்பிலேயோ இருக்கும்.
தாயக் கட்டையின் மூனு பக்கத்துல (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்துல புள்ளி ஏதும் இருக்காது (0). இந்த 2 தாயக் கட்டைகளை உருட்டினா 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) -ன்ற எண்கள் விழும். இதுல 1(தாயம்), 5, 6, 12 எண்கள் வந்தா மறுக்கா உருட்டலாம். இதே எண்கள் மறுக்கா மறுக்கா வந்தா ‘விருத்தம்'-ன்னு சொல்லுவோம்.

ஒரு சிலருக்கு நல்லா விருத்தம் விழும்..


எங்கூர்ல கரம் இப்படித்தானிருக்கும்.



மொதல்ல ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனக்குன்னு காய்கள (4 அல்லது 6) எடுத்து நடுவால மனைல வெச்சுக்கனும்.

யாரு மொதல்ல தாயம் (1) போடறாங்களோ அவங்கதான் காய் நகத்தத் தொடங்கனும். இதனால மொதல்ல கொஞ்சனேரம் ‘தாயமா.. தாயம்மா'-ன்னு கிண்டலா போய்ட்டிருக்கும்.


ஒரு கட்டத்தில ஒரு ஆட்டக்காரரோட காய்களே இருக்க முடியும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில நுழைஞ்சா முதலிருந்த காய்கள வெட்டனும். காய் வெட்டப் பட்ட பின்னாடி மனைக்கு திரும்பிபோய் மறுபடியும் தாயமோ, அஞ்சோ போட்டுத்தான் வெளிய வரமுடியும்.

குறுக்க கோடுகள் இருக்குர கட்டங்கள மலைன்னு சொல்லுவோம். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்கலாம். இதுல இருக்கறக் காய்கள வெட்ட முடியாது.

1, 5, 6, அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. எதிராளி காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு.

ஒரு முறை சுத்தி வந்த பின்னாடி திரும்பவும் மனைக்குள் போலாம். இதப் பழத்துக்குப் போறதுன்னு சொல்லுவோம். பழத்துக்குப் போகும்போது கட்டத்து வழியாப் போகாம நடுவால இருக்கர கோடு வழியா காய்கள் போகும்.

ஆனால் எதிராளியோட காய்கள முன்னமே வெட்டாம பழத்துக்குப் போக முடியாது.

முதல்ல யாரு எல்லாக் காயயும் பழமாக்குகிறார்களோ அவங்களெ ஜெயிச்சவங்க.

எதிராளி உங்கள வெட்டாம நீங்க அவங்கள வெட்டி எல்லாக் காயயும் பழமாக்கிட்டா எதிராளி 'வெட்டாக்கூல்'.

- ஆட்டம் தொடரும் -