Friday, September 19, 2008

கற்றது தமிழ் : பிடித்ததும், வெறுத்ததும்..

படம் வந்து இவ்வளவு நாள் கழித்து, ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக' ஒளிபரப்பிய பின் எதற்கு இந்த விமர்சனம்?

'குப்பை வலையில்' 2 வாரத்துக்கு முன் 'கற்றது தமிழ், செத்தது ரசனை!' என்றத் தலைப்பிலான பதிவைப் படித்தபின் கீழிருக்கும் பின்னூட்டத்தை இட்டிருந்தேன்.

'இன்னும் நான் படம் பார்க்கவில்லை.. ஆனால் ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. கடற்கரையில் காதல் செய்து கொண்டிருக்கும் காதலர்களை கொல்லும் காட்சி. படு முட்டாள்தனமாகப் பட்டது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் தமிழனை இதைவிடக் கேவலப் படுத்த முடியாது என்று தோன்றியது. அதனால் படம் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இப்பதிவைப் படித்ததும் அந்த முடிவு சரிதான் என்று படுகிறது. நன்றி'

நான் பார்த்த ஒரு காட்சி: கடற்கரையில் காதலர்களை நாயகன் சுடும் காட்சியும் அதை ஒத்த வசனங்களும். அக்காட்சியைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய எண்ணம், ‘இது அவனது சொந்த கையாலாகாதத் தனத்தையே காட்டுகிறது.. இதற்கும் தமிழ் படிப்பதற்கும் என்ன சம்மந்தம்? தமிழ் படிக்கிறவன் இதைத்தான் செய்வான் என்று கூறி தமிழனை இதற்கு மேல் அவமானப் படுத்த முடியாது'


இதனைப் படித்த தமிழ்ப்பறவை said...

''குப்பை' எனும் வலைப்பூவில் 'கற்றது தமிழ்' படத்தைப் பற்றிய தங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு காட்சியை மட்டும் வைத்து படத்தை எடை போடாதீர்கள்..
கதையின் கருத்து எப்படியோ, படமாக்கிய விதம், ஒளிப்பதிவு, இசை எனப் பல விஷயங்கள் உள்ளன..
படத்துக்கான எதிர்வினைகள் வலைப்பூவில் தீவிரமாக இருந்தது.. காரனம் உங்களுக்கே தெரியும்...
முடிந்தால் மூன்று ம்ணி நேரம் செலவழித்துப் படம் பாருங்கள்( எந்த விமர்சனத்தையும் நினைத்துப்பாராமல்) பின்பு நீங்கள் விமர்சியுங்கள் படம் குப்பையா இல்லை மோசமான குப்பையா எதுவாயினும் தெரிவியுங்கள்..
ஒரு நண்பராகக் கூறுகிறேன்.. பின் படம் பார்ப்பதும், பார்க்காததும், படம் உங்களுக்குப் பிடிப்பதும்,பிடிக்காததும் வேறு விஷயம்..


- என்று கூறியிருந்தார்.

நேற்று படத்தை ‘முழுவதும்' பார்த்தேன்..

முதலில் படத்தில் பிடித்தவைகள்:

1) நடிகர்கள், நடிப்பு: கதை நாயகனிலிருந்து, அவனது நண்பனாக வந்து அடி வாங்கிப் போகும் ஆள் வரை... முகங்களின் தேர்வு கனக்கச்சிதம். ஒரு காட்சியில் வந்து போகும் நாயகியின் மாமா கூட அவ்வளவு பொருத்தம். இது வரை எந்தவொரு படத்திலும் இவ்வளவு அருமையான, பொருத்தமான முகங்களைப் பார்த்ததில்லை. அது சுலபமான வேலையும் இல்லை. இயக்குனர் இதில் தனித்திறமை பெற்றிருக்கிறார். அனைவரும் இயல்பான காட்சியமைப்புகளில் மிக இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்.
பின்னனி (dupping sound) கொடுக்காமல் நேரடியாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்களோ என்று தோன்றியது.

2)ஒளிப்பதிவு: 'கலக்கல்'!!!!! ஒளிப்பதிவாளர் கதிர் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து பதித்துள்ளார். படத்தில் வந்த முகங்கள் அவ்வளவு இயல்பாக இருந்ததற்கு இவரது பங்கும் முக்கியமான ஒன்று. நிறைய 'காட்சிகள்' ஓவியமாகத் தோன்றியது. இவரது வேறு படங்கள் யாருக்காவது தெரிந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள். பார்க்க வேண்டும்.


3) கருத்து: இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வந்த கருத்தாக எனக்குத் தோன்றியது 'ஒரு சமூகத்தில் ஒரு சாரார் மட்டுமே பணம் சேர்ப்பதும் ஒரு சாராருக்கு எதுவும் கிடைக்காமல் போவதும் கூடிய சீக்கிரத்தில் குற்றங்களை அதிகரிக்கச் செய்யும்.' இது முற்றிலும் உண்மை. நம்மைப் போன்று IT-யில் வேலை செய்பவர்கள் சம்பாதிக்கும் பணம் சராசரி மக்களின் சம்பளம் (நம்மை விட பல மடங்கு உழைத்தும்) பல மடங்குக் குறைவு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான மக்களின் கோபமும் அங்கலாப்பும் நியாயமானதே..

இனி படத்தில் வெறுத்தவைகள்:

நல்ல கருத்து, அட்டகாசமான நடிகர் தேர்வு, அருமையான ஒளிப்பதிவு, குறைகளில்லாத இசை.. இவை அத்தனையும் ‘விழலுக்கு இறைத்த நீர்', ‘குரங்கு கையில் பூமாலை'.

சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளைச் சொல்ல ‘கற்றது தமிழ்' என்ற தலைப்பு எதற்கு என்று புரியவில்லை.
நாயகன் ஏன் நிறையத் தமிழ் வசனத்திற்கு அப்புறம் ஆங்கிலத்தில் திருப்பிச் சொல்லுகிறான் என்பதும் புரிய வில்லை.

தமிழ் படிப்பதால் உள்ள பிரச்சினைகளை சொல்வதா? பிராபாகரன்- ஆனந்தியின் காதலைச் சொல்லுவதா? சமூகப் பிரச்சினைகளைச் சொல்வதா? என்று இயக்குனர் குழம்பி..சரி எல்லாவற்றயும் சொல்லிவிடுவோம்.. என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு காட்சி வைத்து.. ஒரு தொடர்ச்சியில்லாமல் செய்து விட்டார்.

இயக்குனருக்கு முதல் படம் என்று நினைக்கிறேன். முதல் படம் நன்றாக அமைய வேண்டும் என்ற தவிப்போ என்னவோ, தன் மனதில் உள்ள எல்லா எண்ணங்களையும் காட்சிகளாக்க வேண்டும் என்று எடுத்திருப்பதால் பல காட்சிகள் மனதில் பதிய மறுக்கிறது. கடைசி 10 நிமிடங்களைத் தவிர மீதி நேரங்களில் படத்தில் கவனம் செலுத்துமளவிற்கு காட்சி அமைப்புகள் இல்லை.

படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் சிறு பிள்ளைத்தனமான காட்சி வரிசைகளால் வீணடித்திருக்கிறார். உதாரணத்திற்கு, நாயகனுக்கும், அவரது தமிழாசிரியற்கும் வரும் பாடல்.. தமிழாசிரியரை அதற்கு முந்தைய காட்சியில் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர் யார் என்று உணரும் முன்பே பாடல் வந்து விடுகிறது.

அப்புறம் இந்த கதை சொல்லும் பாணி.. நாயகன், ஒருவனைப் பிடித்து அவனிடம் தன்னுடைய பராக்கிரமங்கள் எல்லாம் சொல்லுவது போல்.. படம் முழுவதும் நாயகனின் குரல் ஒவ்வொரு காட்சியிலும் விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பது.. சகிக்கவில்லை. இது ஒரு கடைந்தெடுத்த அமெச்சூர்த்தனம். இதற்கு திரைப்படம் தேவையில்லை. ஒரு வானொலி நாடகமோ புத்தகமோ போதும்.

இப்போதுள்ள பல புதிய இயக்குனர்கள் நல்ல கதை எழுதுகிறார்கள். அவர்களிடம் நல்ல நல்ல கருத்துக்கள் இருக்கிறது. ஆனால் அவர்கள் திரைக்கதையை ரொம்பவும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இதில் சேரன் ஒரு சிறந்த உதாரணம் (பாரதி கண்ணம்மா தவிர்த்து).

ஒரு பைத்தியக்காரனை தமிழ் படித்தவனாக காட்டி, கற்றது தமிழ் என்று அழகானத் தலைப்பு வைத்து, அவன் செய்யும் பைத்தியத்தனமான வேலைகளை தமிழ் படித்தவன் செய்யும் செய்கைகளாக செய்து தமிழர்களை கேவலப்படுத்தியிருப்பது வெறுப்பாக இருந்தது.

இந்தக் கதையையும், காட்சிகளையும் பிரித்து 'நெஜமாத்தான் சொல்றியா?' என்ற ஒரு அழகான காதல் படமாகவும், 'பைத்தியக்காரன்' என்ற சமூகப் புரட்சிப் படமாகவும் எடுத்து விட்டு, ஒரு தேர்ந்த திரைக்கதையுடன் ‘கற்றது தமிழ்' என்ற தலைப்பில் தமிழ் வழிக் கல்வி படிப்பதால் உள்ள உண்மையான பிரச்சினைகளை மட்டுமே வைத்து ஒரு படமாகவும் எடுத்திருந்தால் கண்டிப்பாக 3 படங்களும் ரசிக்கும் படியாகவும் இருந்திருக்கும், வெற்றியும் பெற்றிருக்கும். நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், மற்றும் இதர திறமையாளர்களின் உழைப்பும் வீணாகியிருக்காது.

6 comments:

பாபு said...

முதலில் வெறுத்தவைகள் என்று இருக்கிறது, பிடித்தவைகள் என்று தானே இருக்க வேண்டும்

சரண் said...

பாபு,

சுட்டிக்காட்டியதற்கு ரொம்ப நன்றி.

சரி செய்து விட்டேன்.

thamizhparavai said...

நண்பர் சூர்யாவிற்கு...கோரிக்கையை ஏற்று படம் பார்த்து விமர்சித்தமைக்கு நன்றி...
//இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வந்த கருத்தாக எனக்குத் தோன்றியது 'ஒரு சமூகத்தில் ஒரு சாரார் மட்டுமே பணம் சேர்ப்பதும் ஒரு சாராருக்கு எதுவும் கிடைக்காமல் போவதும் கூடிய சீக்கிரத்தில் குற்றங்களை அதிகரிக்கச் செய்யும்.' இது முற்றிலும் உண்மை. நம்மைப் போன்று IT-யில் வேலை செய்பவர்கள் சம்பாதிக்கும் பணம் சராசரி மக்களின் சம்பளம் (நம்மை விட பல மடங்கு உழைத்தும்) பல மடங்குக் குறைவு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான மக்களின் கோபமும் அங்கலாப்பும் நியாயமானதே..//
கருத்தினைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி சூர்யா...
படத்தின் தலைப்பினைப் பற்றிய தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
என் கண்ணோட்டத்தில் படமானது தொடர் பிரச்சினைகளால் மனநிலை பிறழ்கிற ஒருவனின் பார்வையில் கதை செல்கிறது.
உதாரணத்திற்கு நமது படங்களில் ஒருவன் கஞ்சா அடித்தால் அவனுக்குத் தெரியும் தெளிவற்ற பார்வையை உணரவைக்க ,நமக்கும் படத்தின் காட்சியை சற்றுத் தெளிவில்லாமல் ஆடுவது போல், புகை போட்டது போல காட்டுவார்கள்.அத்தொனியிலேயே கதை செல்கிறது என நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் பிரித்துப்பிரித்து படம் எடுக்கலாம்.
நீங்கள் அய்யனார்,பைத்தியக்காரனின் எழுத்துக்களைப் படித்திருக்கிறீர்களா..?
ஏதோ பின்நவீனம் என்று சொல்வார்கள்.அவர்கள் பிரச்சினையையோ, சந்தோஷத்தையோ சொல்ல எடுத்த மொழிவடிவம் வேறு. எனக்கு அது முற்றிலுமாகப் புரியவில்லை என்பது வேறு விஷயம்.
ஆனால் திரையில் நான் உணர்ந்து கொண்டேன்.
கோரிக்கையை ஏற்றுப் படம் பார்த்ததற்கு நன்றி. தங்களை இப்படம் பார்க்கத் தூண்டியதால், தாங்கள் படம் பார்த்துக் கஷ்டப்பட்டிருந்தால் மன்னிக்கவும்...

சரண் said...

தமிழ்ப்பறவை said...
//என் கண்ணோட்டத்தில் படமானது தொடர் பிரச்சினைகளால் மனநிலை பிறழ்கிற ஒருவனின் பார்வையில் கதை செல்கிறது.
உதாரணத்திற்கு நமது படங்களில் ஒருவன் கஞ்சா அடித்தால் அவனுக்குத் தெரியும் தெளிவற்ற பார்வையை உணரவைக்க ,நமக்கும் படத்தின் காட்சியை சற்றுத் தெளிவில்லாமல் ஆடுவது போல், புகை போட்டது போல காட்டுவார்கள்.அத்தொனியிலேயே கதை செல்கிறது என நினைக்கிறேன்.//

கஞ்சா அடித்தவனின் பார்வைபோல்.. என்றால் எனக்கு நினைவிற்கு வருவது ‘ஆளவந்தான்' திரைப்படம். இடைவேளைக்கு மேல் கஞ்சா அடித்திருந்தால் மட்டுமே புரியும்படி எடுக்கப்பட்டிருக்கும்... கற்றது தமிழ் அந்தளவிற்கெல்லாம் இல்லை.. வெறும் கற்றுக்குட்டித்தனம் தான் தெரிந்தது..


//நீங்கள் அய்யனார்,பைத்தியக்காரனின் எழுத்துக்களைப் படித்திருக்கிறீர்களா..?
//

இல்லீங்களே...

//ஏதோ பின்நவீனம் என்று சொல்வார்கள்.அவர்கள் பிரச்சினையையோ, சந்தோஷத்தையோ சொல்ல எடுத்த மொழிவடிவம் வேறு. எனக்கு அது முற்றிலுமாகப் புரியவில்லை என்பது வேறு விஷயம்.
ஆனால் திரையில் நான் உணர்ந்து கொண்டேன்.//

அவ்வளவு புத்திசாலித்தனமாகவெல்லாம் படம் எடுக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை..


//கோரிக்கையை ஏற்றுப் படம் பார்த்ததற்கு நன்றி. தங்களை இப்படம் பார்க்கத் தூண்டியதால், தாங்கள் படம் பார்த்துக் கஷ்டப்பட்டிருந்தால் மன்னிக்கவும்...
//

படம் பாத்ததால லேசாத் தலைவலி மட்டும்தாங்க.. இருந்தாலும் மன்னிச்சுட்டேங்க...

Unknown said...

இப்போது ஐடி துறையில் ஆட்குறைப்பு, லே ஆஃப்,சம்பள குறைப்பு நடக்கிறது.வேலை இழந்தவர்களுக்கு 'ஐயோ பாவம்' என்று பொதுமக்கள் சேர்ந்து வேலைகொடுக்க போகிறார்களா?

அடுத்தவன் படித்து முன்னேறி நன்றாக இருந்தால் சந்தோஷப்படவேண்டும்.அவனை முன்னுதாரணமாக கொண்டு நாமும் முன்னேற வேண்டும்.ஐடி துறையினர் பற்றிய பொதுமக்களின் மனோபாவம் 'இந்திய நண்டுகள்' கதையின் நீதியை மேலும் வலியுறுத்துவதாகவே அமைந்தது தான் வருத்தமான விஷயம்.

Anonymous said...

http://directorram.blogspot.com/
இந்த blog கை படிச்சு பாருங்க சூர்யா அவர் சொல்லவந்தது உங்களுக்கு கொஞ்சமாவது புரியும் குறிப்ப இத படிங்கhttp://directorram.blogspot.com/2008/06/blog-post_26.html